ஜேர்மனியில் எட்டு நாட்களுக்கு முன் காணாமல் போன சிறுவன்... நடந்த அற்புதம்
ஜேர்மனியில் எட்டு நாட்களுக்கு முன் காணாமல் போன ஒரு சிறுவன், மழை நீர் வடிகால் ஒன்றிற்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான், உயிருடன்...
Oldenburg என்ற இடத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனான ஜோ, சிறிது உடற்குறைபாடு கொண்டவனும் கூட. எட்டு நாட்களுக்கு முன் காணாமல் போனான் அவன்.
இந்நிலையில், சாக்கடை மூடி ஒன்றின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான் ஜோ.
தொடர்ந்து சில நாட்களாக அவனைத் தேடியும் கண்டுபிடிக்கமுடியாததால் தேடும் முயற்சியே கைவிடப்பட்ட நிலையில், சாக்கடை மூடி ஒன்றின் கீழிருந்து யாரோ விம்மி விம்மி அழும் குரலைக் கேட்ட பாதசாரி ஒருவர் பொலிசாருக்குத் தகவலளிக்க, விரைந்து வந்த மீட்புக் குழுவினர் குளிரில் துவண்டுபோய், நீர்ச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜோவை வடிகால் கால்வாய்க்குள்ளிருந்து மீட்டார்கள்.
ஜோவை தேடியவர்கள், இனி அவன் கிடைக்கமாட்டான் என நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில், ஏதோ அற்புதம் நடந்ததுபோல, உயிருடன் அவன் கிடைத்த விடயம் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.