கணவர் இறந்து நான்கு நாட்களே ஆன நிலையில் பணிக்கு திரும்பிய பிரித்தானிய மகாராணியார்: இவருக்காகத்தானாம்
கணவர் இளவரசர் பிலிப் இறந்து நான்கு நாட்களே ஆன நிலையில், பணிக்குத் திரும்பியிருக்கிறார் பிரித்தானிய மகாராணியார்.
இளவரசர் பிலிப் இறந்ததும், 73 ஆண்டுகள் கணவருடனேயே இணைந்து செயலாற்றிய மகாராணியார், இனி அவர் இல்லாமல் எப்படி தனித்து செயலாற்றுவார் என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்தது.
அந்த கேள்விக்கு பதில் கொடுக்கும் வகையில், கணவர் இறந்து நான்கு நாட்களே ஆன நிலையில், கணவர் இல்லாமல் தனித்து கடமையாற்ற புறப்பட்டுவிட்டார் மகாராணியார்.
மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் தனது 99ஆவது வயதில் இயற்கை எய்திய நிலையில், இரண்டு வாரங்கள் துக்கம் அனுஷ்டிப்பதாக அரண்மனை வட்டாரம் அறிவித்திருந்தது.
ஆனால், கடமைக்கு முதலிடம் கொடுக்கும் மகாராணியார், கணவர் இறந்து நான்கே நாட்களில் கடமையாற்றத் திரும்பிவிட்டார். ராணியாரின் வலது கைபோல் செயல்பட்டவரான Earl Peel என்னும் அரண்மனை அலுவலர் ஒருவர், 14 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு தற்போது ஓய்வு பெறுகிறார்.
Earl Peel அரண்மனையிலேயே மூத்த அலுவலர் ஆவார். இளவரசர் பிலிப்புடைய இறுதிச்சடங்கு தொடர்பான பணியையும் அவர்தான் மேற்பார்வையிட்டுவந்தார்.
இந்நிலையில், அவர் ஓய்வு பெறுவதால்தான், துக்கம் அனுஷ்டிப்பதாக அறிவிக்கப்பட்டதையும் மீறி, அவருக்கு பிரியாவிடை அளித்து, இவ்வளவு வருடங்கள் தங்களுக்காக உழைத்த அவரை கௌரவிப்பதற்காக மகாராணியார் பணிக்கு திரும்பியுள்ளார்.