அறுவை சிகிச்சையின்போது நோயாளிகளின் கல்லீரலில் தன் பெயரை பொறித்த மருத்துவர்: ஒரு அதிர வைக்கும் செய்தி
பிரித்தானிய மருத்துவர் ஒருவர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது, இரண்டு நோயாளிகளின் கல்லீரலில், தன் பெயரை பொறித்ததாக ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (Transplant surgeon) நிபுணரான Simon Bramhall (57), 2013ஆம் ஆண்டு, அறுவை சிகிச்சை செய்யும்போது, இரண்டு நோயாளிகளின் கல்லீரலில், அவர்கள் சுயநினைவு இல்லாமல் இருக்கும்போது, லேசர் கருவியின் உதவியுடன், தனது பெயரின் சுருக்க எழுத்துக்களை பொறித்துள்ளார்.
இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, Simonக்கு 10,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டதுடன், சமூக சேவை செய்யுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், வழக்கை மீளாய்வு செய்த மருத்துவர்களுக்கான ஒழுங்கு முறை ஆணையம், Simonக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதாது, அவரது மருத்துவ உரிமத்தையே ரத்து செய்யவேண்டும் என நேற்று பரிந்துரைத்தது.
Simon தரப்பில், அவர் அறுவை சிகிச்சை அறை டென்ஷன் காரணமாக, அந்த டென்ஷனிலிருந்து விடுபடுதற்காக, நோயாளிகளின் கல்லீரலில் தனது பெயரின் முதல் எழுத்துக்களை பொறித்ததாக வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், அது டென்ஷனிலிருந்து விடுபடுவதற்காக Simon செய்த செயல் அல்ல, தான் ஒரு மருத்துவர் என்ற ஆணவத்தில் செய்யப்பட்ட செயல் என ஆணையம் கூறியுள்ளது.
ஆகவே, Simonஉடைய மருத்துவ உரிமம் ரத்து செய்யப்படவேண்டும் என மருத்துவர்களுக்கான ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.