மிகப்பெரிய தொகை கொண்ட காசோலையைக் கண்டெடுத்த ஜேர்மானியர்: உரியவரிடம் ஒப்படைத்தபோது கிடைத்த ஏமாற்றம்
பிரபல நிறுவனம் ஒன்றின் காசோலை ஒன்றைக் கண்டெடுத்தார் ஜேர்மானியர் ஒருவர்.
அது மிகப்பெரிய ஒரு தொகைக்குரிய காசோலையாக இருந்ததால், உடனடியாக அதை அந்த நிறுவனத்திடம் சேர்த்துவிட முடிவு செய்தார் அவர்.
மிகப்பெரிய தொகை
Anouar G (38) என்ற ஜேர்மானியர் ரயில் நிலையம் ஒன்றில் காசோலை ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளார். அதை அவர் எடுத்து பார்த்தபோது, தனது கண்களையே அவரால் நம்பமுடியவில்லை. காரணம், அந்த காசோலையில் எழுதப்பட்டிருந்த தொகை 4.7 மில்லியன் டொலர்கள்.
அவரது நல்ல எண்ணம்
அவ்வளவு பெரிய தொகை கொண்ட அந்த காசோலை, பிரபல இனிப்பு தயாரிப்பு நிறுவனமான Haribo என்னும் நிறுவனத்துக்கு Rewe என்னும் ஜேர்மன் பல்பொருள் அங்காடியால் வழங்கப்பட்டிருந்தது.
உடனே அந்த இனிப்பு நிறுவனத்தைத் தொடர்புகொண்டுள்ளார் Anouar. அந்த நிறுவனத்தாரிடம் அவர் இந்த காசோலை குறித்த தகவலைத் தெரிவித்ததும், அந்தக் காசோலையைக் கிழித்துப் போட்டுவிட்டு, அதற்கான ஆதாரத்தைத் தங்களுக்கு அனுப்பும்படி அந்த நிறுவனத்தார் கூறியுள்ளார்கள்.
அப்படியே அவர் செய்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, Anouarக்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் பரிசொன்றை அனுப்பிவைத்துள்ளது Haribo நிறுவனம்.
pic Representative
அது என்ன பரிசு என பார்சலைப் பிரித்துப் பார்த்த Anouarவுக்கு பெருத்த ஏமாற்றம் காத்திருந்துள்ளது. ஆம், Haribo நிறுவனத் தயாரிப்பான இனிப்புகள் கொண்ட ஆறு பாக்கெட்டுகள் அதில் இருந்துள்ளன.
அது ரொம்ப மட்டமான பரிசாக இருந்தது என்கிறார் Anouar. ஆனால், Haribo நிறுவனமோ, தாங்கள் யாருக்கு நன்றி தெரிவிக்க விரும்பினாலும் இந்த இனிப்பு பார்சலைத்தான் அனுப்புவோம் என்று கூறியதுடன், அந்த காசோலை பெயர் பொறிக்கப்பட்ட காசோலை, அதை யாராவது எடுத்தாலும் அதைப் பயன்படுத்தவும் முடியாது என்றும் கூறிவிட்டதில் Anouarவுக்கு உண்மையாகவே ஏமாற்றம்தான்.