புலம்பெயர்ந்த சாரதியின் காரை பட்டப்பகலில் திருடமுயன்ற சிறுமிகள்... கொலையில் முடிந்த வழக்கில் தீர்ப்பு
பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து, சாரதியாக பணியாற்றிக்கொண்டிருந்த ஒருவரின் காரை இரண்டு சிறுமிகள் திருட முயன்ற சம்பவம் ஒரு உயிரிழப்பில் முடிந்தது.
அமெரிக்காவில், உபேர் ஈட்ஸ் நிறுவனத்துக்காக கார் ஓட்டிக்கொண்டிருந்திருக்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அன்வர் (Mohammad Anwar, 66). வாஷிங்டன் டிசியில், மார்ச் மாதம் 23ஆம் திகதி, தனது காரின் எஞ்சினை அணைக்காமல் விட்டு விட்டு, உணவு டெலிவரி செய்யச் சென்றிருக்கிறார் அன்வர்.
அப்போது, 13 மற்றும் 15 வயதான இரண்டு சிறுமிகள் அவரது காரில் ஏறியிருக்கிறார்கள். அன்வர் யாரோ காரில் ஏறுவதைக் கண்டு காருக்குத் திரும்ப, திடீரென, டேஸர் என்னும் மின்சாரம் கொடுக்கும் கருவியால் அனவரைத் தாக்கி, காரை அவரிடமிருந்து திருட முயன்றுள்ளார்கள் அந்த சிறுமிகள்.
அன்வர் அவர்களுடன் போராட, போராட்டத்தில் சீறிப்பாய்ந்த கார் மற்றொரு காருடன் மோதி கவிழ்ந்துள்ளது. காரிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார் அன்வர்.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் அவர்.
சிறுமிகள் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது. தற்போது, அந்த சிறுமிகளில் 15 வயதுள்ள ஒரு சிறுமி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் மீது, கொலை, ஆயுதத்துடன் கார் கடத்தியது, கொள்ளை, ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அந்த சிறுமி தன் மீதான கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மற்ற குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த மாதம் (ஜூன்), அந்த 15 வயது சிறுமிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆறு ஆண்டுகள் வரை அவளுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, அவள் 21 வயது வரை சிறையிலேயே செலவிட நேரிடும். இன்னொரு சிறுமி, அதாவது, அந்த 13 வயது சிறுமியின் வழக்கு, இம்மாதம் (மே) 17ஆம் திகதி, விசாரணைக்கு வருகிறது.
பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தவரான அன்வர், தனது மனைவி, மூன்று பிள்ளைகள் மற்றும் நான்கு பேரக்குழந்தைகளுக்காக இந்த வயதிலும் வேலை செய்துவந்த நிலையில், அந்த சிறுமிகளின் அராஜக செயலால் அவரது குடும்பம் அநாதரவாக விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.