திடீரென பயங்கரமாக வெடித்துச் சிதறிய வீடு... குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்
அமெரிக்காவில், திங்கட்கிழமை இரவு, வீடு ஒன்று வெடித்துச் சிதறியதில், நான்கு வயது குழந்தை ஒருத்தி பரிதாபமாக உயிரிழந்தாள்.
திங்கட்கிழமை இரவு, Michigan மாகாணத்திலுள்ள Flint என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்று திடீரென பயங்கரமாக வெடித்துச் சிதறியது.
இந்த பயங்கர சம்பவத்தில், அந்த வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமியான NuVeah Lucas உயிரிழந்தாள்.
அந்த வீடு வெடித்ததில், ஐந்து மைல் தொலைவிலிருந்த வீடுகள் கூட அதிர்ந்துள்ளன. அந்த வீட்டிலிருந்து வெகு தொலைவில் அமைந்திருந்த வீடுகள் கூட சேதமடைந்துள்ளன. அந்த வீடும், அந்த வீட்டின் அருகிலிருந்த இரண்டு வீடுகளும் முற்றிலும் நாசமானதில், அருகிலிருந்த வீடு ஒன்றிலிருந்த 70 வயது நபர் ஒருவரும் பலியாகியுள்ளார், அவரது பெயர் குறித்த எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
இந்த வெடிவிபத்தின்போது, NuVeahஇன் தந்தையான David தன் மனைவியாகிய Alyshiaவை மறைத்துக்கொண்டதால் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார். அவர் கர்ப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், Davidக்கு உடலில் 70 சதவிகித காயங்கள் ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக அவரது மனைவியின் தாயார் தெரிவித்துள்ளார்.
எதனால் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது என்பது தெரியவில்லை. ஒருவேளை எரிவாயுக் குழாய் ஏதாவது வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், அந்த வெடிச்சத்தத்தைக் கேட்டவர்கள் 2000 பவுண்டு வெடிகுண்டு ஒன்று வெடித்தது போல உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்கள்.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.