ஜேர்மனிக்கு எரிவாயு வழங்கும் விவகாரம்... ரஷ்யா ஏமாற்றுகிறதா?
ஜேர்மனிக்கு ரஷ்ய நிறுவனம் ஒன்றிலிருந்து குழாய் மூலம் எரிவாயு வழங்கப்பட்டு வந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது உலக நாடுகள் பல தடைகள் விதித்தன.
அதன் பின், ரஷ்யா ஜேர்மனிக்கு வழங்கிவந்த எரிவாயுவின் அளவைப் படிப்படியாகக் குறைக்கத் துவங்கியது. தற்போது வெறும் 20 சதவிகித எரிவாயு மட்டுமே ஜேர்மனிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ஜேர்மனிக்கு குழாய் மூலம் எரிவாயு அனுப்ப உதவும் ஒரு இயந்திரம் பழுதாகிவிட்டதால்தான் எரிவாயுவின் அளவு குறைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது ரஷ்யா. அந்த பழுதான இயந்திரம் கனடாவிலுள்ள Siemens நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், பழுது நீக்கப்பட்ட அந்த இயந்திரத்தை ரஷ்யாவிடம் திருப்பிக் கொடுக்க உக்ரைன் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்ப்பையும் மீறி, சிறப்பு அனுமதிகள் மூலம் அந்த இயந்திரத்தை பழுதுநீக்கியது கனடா.
ஆனால், இப்போதும் ரஷ்யா ஜேர்மனிக்கு எரிவாயு வழங்கல் குறைக்கப்பட்டதற்குக் காரணம் அந்த இயந்திரம் திரும்பக் கொடுக்கப்படாததால்தான் என்றே கூறிவருகிறது.
image - Wolfgang Rattay/Reuters
உண்மையில், அந்த இயந்திரம் பழுது நீக்கப்பட்டுவிட்டது. அந்த இயந்திரத்தை ஜேர்மனியிலுள்ள Siemens நிறுவனத்துக்கு வரவழைத்துள்ள ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், அந்த இயந்திரம் தயாராகிவிட்டது என்று கூறியுள்ளதுடன், அதற்கு ஆதாரமாக, அந்த இயந்திரத்தின் முன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
ஆனால், இப்போதும் ரஷ்யா சாக்குப்போக்குதான் சொல்லிவருகிறது. இம்முறை, கனடா அந்த இயந்திரத்தை ரஷ்யாவுக்கு அனுப்பாமல் ஜேர்மனிக்கு அனுப்பியது தவறு, அது ஒப்பந்தத்தில் இல்லை என குற்றம் சாட்டுகிறது ரஷ்யா.
இந்நிலையில், அந்த இயந்திரம் தயாராக இருக்கிறது என்று கூறியுள்ள ஷோல்ஸ், அதை வாங்கத்தான் யாரும் இல்லை என்கிறார்.
அத்துடன், ரஷ்யா அந்த இயந்திரத்தை திரும்பப் பெற்றுக்கொண்டாலும், ஒப்பந்தப்படி ரஷ்யா எரிவாயு வழங்குவது சந்தேகம்தான் என்றும் கூறியுள்ளார் ஷோல்ஸ்.