ஹரி மேகன் குழந்தைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்... மகாராணியாரை வருந்தச் செய்யும் என நிபுணர்கள் கருத்து
பிரித்தானிய இளவரசர் ஹரி மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவர்கள் மகாராணியாரின் செல்லப்பெயரை குழந்தைக்கு சூட்டியுள்ளார்கள்.
ஒருபக்கம், இதனால் மகாராணியார் மகிழ்ச்சி அடையலாம், ஹரிக்கும் ராஜ குடும்பத்துக்கும் இடையில் உருவாகியுள்ள பிரச்சினை தீரலாம் என கருதப்பட்டது. ஆனால், அந்த பெயர் மகாராணியாரை வருத்தமுறச் செய்திருக்கும் என வித்தியாசமான கோணத்தில் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
ஹரி மேகன் தம்பதியர் தங்களுக்கு இரண்டாவதாக பிறந்துள்ள பெண் குழந்தைக்கு, லிலிபெட் லில்லி டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர் என்று பெயரிட்டுள்ளார்கள்.
அதில் ஹரியின் தாய் டயானாவை கௌரவிக்கும் வகையில் குழந்தைக்கு டயானா என்றும், பிரித்தானிய மகாராணியாரும், ஹரியின் பாட்டியுமான எலிசபெத் மகாராணியாரை கவுரவிப்பதற்காக லிலிபெட் என்ற பெயரையும் ஹரி மேகன் தம்பதியர் தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளனர். ஆனால், லிலிபெட் என்பது, மகாராணியாரை அவரது கணவர் பிலிப் மட்டுமே அழைக்கும் செல்லப்பெயராகும்.
குழந்தையாக இருந்தபோது மகாராணியாருக்கு எலிசபெத் என்ற பெயரை உச்சரிக்க கடினமாக இருந்ததாம், ஆகவே, அவரது தாத்தாவான ஐந்தாம் ஜார்ஜ் அவரை லிலிபெட் என அழைத்தாராம்.
அந்த பெயரைத்தான் அவரது கணவரான பிலிப்பும் தன் மனைவியை செல்லமாக அழைக்க பயன்படுத்தினாராம். ஆகவே, தன்னை செல்லமாக அழைக்க, தன் தாத்தா மற்றும் தன் கணவர் மட்டுமே பயன்படுத்திய லிலிபெட் என்ற பெயரை ஹரி மேகன் தம்பதி தங்கள் குழந்தைக்கு வைத்துள்ளதால், மகாராணியார் வருத்தமடைவார் என ராஜ குடும்ப நிபுணரான Angela Levin தெரிவித்துள்ளார்.
தனது தனிப்பட்ட, சிறப்பு பெயரை ஹரி மேகன் தம்பதி தங்கள் குழந்தைக்காக எடுத்துக்கொண்டது அவரை அவமதிக்கும் செயல், அநாகரீகமான செயல் என மகாராணியார் கருதுவார் என்கிறார் அவர். இதற்கிடையில், மேகனை விமர்சித்ததற்காக தன் வேலையையே துறந்த பத்திரிகையாளரான பையர்ஸ் மார்கன், ஹரி மேகன் தம்பதி தங்கள் மகளுக்கு வைத்துள்ள பெயர் முரண்பாடானது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பல வாரங்களாக ஹரி மேகன் தம்பதி ராஜ குடும்பத்தை அவமதித்து வந்தார்கள், இப்போது மகாராணியாரை கவுரவிக்கும் வகையில் தங்கள் குழந்தைக்கு அவர் பெயரை வைத்துள்ளார்களாம், இது முரண்பாடாக இல்லையா என்கிறார் அவர்!