வெளிநாட்டவர்களுக்கு ஜேர்மன் குடியுரிமை வழங்குவது குறித்து ஜேர்மனியின் புதிய சேன்ஸலர் என்ன கூறியுள்ளார் தெரியுமா?
அகதிகளுக்கு நாட்டைத் திறந்து விட்டதற்காக கடுமையான எதிர்ப்பை சந்தித்த ஏஞ்சலா மெர்க்கல் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய ஜேர்மன் சேன்ஸலராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர், புலம்பெயர்தல், குடியுரிமை வழங்குதல் ஆகிய விடயங்கள் குறித்து என்ன கொள்கை வைத்துள்ளார்?
16 ஆண்டுகள் ஜேர்மன் சேன்ஸலராக பதவி வகித்த ஏஞ்சலா மெர்க்கல் பதவி விலகியதைத் தொடர்ந்து, Olaf Scholz என்பவர் ஜேர்மனியின் புதிய சேன்ஸலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிதாக சேன்ஸலர் பொறுப்பேற்றுக்கொண்ட Scholz, நேற்று (15.12.2021), ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
விடாமல் இரண்டு மணி நேரம் உரையாற்றிய Scholz, தனது உரையில் அடுத்த நான்கு ஆண்டுகளில் புதிய அரசு என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற உள்ளது என்பது குறித்து விவரித்தார்.
தனது உரையின்போது, ’ஜேர்மனி புலம்பெயர்தலை பின்னணியாகக் கொண்ட ஒரு நாடு’ என்று குறிப்பிட்டார் Scholz.
இது நாம் நம்மையே புரிந்துகொள்ளவேண்டிய ஒரு காலகட்டம் என்று கூறிய அவர், ஆகவே, இது ஜேர்மன் குடியுரிமை பெறுதலை எளிதாக்குவதற்கான நேரமும் கூட என்றார்.
இந்த அடிப்படையில் மட்டுமே, முழுமையாக (வெளிநாட்டவர்கள் ஜேர்மனியுடன்) ஒருங்கிணைந்து வாழ்வதையும், அரசியலில் பங்கேற்பதையும் சாத்தியமாக்க முடியும் என்றார் Scholz.
புதிய ஜேர்மன் அரசு, ஒருவர் ஜேர்மனியில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர் குடியுரிமை பெறமுடியும் வகையில் மாற்றங்கள் கொண்டு வர திட்டம் வைத்துள்ளதாக தெரிவித்தார் அவர். தற்போது ஒருவர் ஜேர்மன் குடியுரிமை பெறவேண்டுமானால், அவர் ஜேர்மனியில் எட்டு ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது.
இதற்கிடையில், சில சிறப்பு விதிமுறைகளின் கீழ், ஐந்து ஆண்டுகள் என்பதை மூன்று ஆண்டுகளாகக் கூட குறைக்கலாம் என கூட்டணி அரசு திட்டம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளின் குடியுரிமை வைத்திருப்பது குறித்த கடுமையான கட்டுப்பாடுகளை நெகிழ்த்தவும் புதிய அரசு திட்டம் வைத்துள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமைகள் வைத்திருப்பதையும் நாம் சாத்தியமாக்க இருக்கிறோம் என்று கூறிய சேன்ஸலர் Scholz, இந்த மாற்றத்தால், மக்கள் எந்த நாட்டிலிருந்து வந்தார்களோ அந்த நாட்டின் குடியுரிமையை தக்கவைத்துக்கொள்வதோடு, ஜேர்மன் குடியுரிமையையும் பெற்றுக்கொள்ளமுடியும் என்றார்.