வருங்கால மன்னரைக் கட்டியணைத்த முதியவர்... சிறைக்கு செல்ல நேரிடுமோ என அச்சம்!
வருங்கால பிரித்தானிய மன்னரான இளவரசர் வில்லியமைக் கட்டியணைத்ததால் பெருமகிழ்ச்சி அடைந்த முதியவர் ஒருவருக்கு, தான் சிறைக்குச் செல்ல நேரிடுமோ என அச்சம் நேரிட்டதாம்!
பிரித்தானிய மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலியைக் குறிக்கும் வகையில், ஸ்காட்லாந்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்கள், இளவரசர் வில்லியமும், அவரது மனைவியான கேட்டும்.
அப்போது வில்லியம் என்ற பெயர் கொண்ட முதியவர் ஒருவரைக் கட்டியணைத்துக்கொண்டார் இளவரசர் வில்லியம்.
உண்மையில் வில்லியமும் கேட்டும் வந்திருப்பதை அறிந்து அவர்களைப் பார்க்கலாம், முடிந்தால் வில்லியமுடன் கைகுலுக்கலாம் என்றும் நினைத்திருந்தாராம் Kennishead என்ற இடத்தில் வாழும் வில்லியம் பர்ன்ஸ் (William Burns, 66).
அப்போது இளவரசர் வில்லியம் அவரிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்க, என் பெயர் வில்லியம் என்று கூறி, இளவரசரிடம் கைகுலுக்க கையை நீட்டியிருக்கிறார் வில்லியம் பர்ன்ஸ்.
உடனே என் பெயரும் வில்லியம்தான் என இளவரசர் கூற, அது எனக்குத் தெரியுமே என அந்த முதியவர் கூற, பெரிதாகச் சிரித்த இளவரசர் வில்லியம், வில்லியம் பர்ன்ஸின் தோளில் கைவைத்துக்கொண்டாராம். பிறகு இளவரசர் வில்லியம் பர்ன்ஸைக் கட்டியணைத்துக்கொள்ள, மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனாராம் அவர்.
இளவரசர் தன்னை அணைத்துக்கொண்டது, ஒரு மகன் தன் தந்தையை அணைப்பது போலவே இருந்தது என்று கூறும் வில்லியம் பர்ன்ஸ், இளவரசரை ஆஹா ஓஹோவென புகழ்கிறார்.
இளவரசர் வில்லியம் ஒரு சிறந்த மன்னராக இருப்பார் என்று கூறும் வில்லியம் பர்ன்ஸ், அவர் நாட்டுக்கு நல்லது செய்வார், அவர் ஸ்காட்லாந்தையும் பிரித்தானியாவையும் ஒன்றாக வைத்துக்கொள்வார் என்கிறார்.
ஆனால், இளவரசர் தன்னைக் கட்டியணைத்ததும், வில்லியம் பர்ன்ஸுக்கு ஒரு பயம் உருவாகியதாக தெரிவிக்கிறார் அவரது மனைவியான Ellen.
ராஜ மரபுகளை மீறி இளவரசர் வில்லியமை தான் கட்டியணைத்ததால், தான் சிறைக்குச் செல்ல நேரிடலாம் என்றும், இளவரசர் தன்னைக் கட்டியணைத்ததால், அவர் சர்ச்சைக்குள்ளாக நேரலாம் என்றும் தான் அஞ்சியதாக தெரிவிக்கிறார் வில்லியம் பர்ன்ஸ்.
என்றாலும், பல உடல் நல பிரச்சினைகள் கொண்ட வில்லியம் பர்ன்ஸ், இளவரசர் தன்னைக் கட்டியணைத்த மகிழ்ச்சியால் இப்போது தனக்கு புது உற்சாகம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கிறார்.