வீட்டில் ஏராளம் துப்பாக்கிகள் வைத்திருந்த நபர்... சோதனையிடச் சென்ற பொலிசார்: தொடர்ச்சியாக நடந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வுகள்
ஜேர்மன் நகரம் ஒன்றில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வீடு ஒன்றை சோதனையிடச் சென்றுள்ளார்கள் பொலிசார்.
நேற்று காலை, Saarland மாகாணத்திலுள்ள Klarenthal என்னும் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வாழும் நபர் ஒருவரிடம் 20க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இருப்பதாகவும், அவர் ஜேர்மன் துப்பாக்கி விதிகளை மீறியிருக்கலாம் என்றும் தகவல் கிடைத்ததையடுத்து, அவரது வீட்டைச் சோதனையிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பொலிசார் அந்த வீட்டுக்குச் செல்ல, அந்த 67 வயது நபரோ, கதவை மூடிக்கொண்டு வீட்டுக்குள் மறைந்திருந்து பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் துவங்கியுள்ளார்.
அவர் சுட்டதில் ஒரு பொலிசார் மீது குண்டு பாய்ந்துள்ளது, மற்றொரு பொலிசார் மீது கண்ணாடிச் சிதறல்கள் தெறித்ததில் அவர் காயமடைய, இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரியவந்துள்ளது.
ஆனால், பொலிசார் திருப்பிச் சுட்டதில் அந்த நபர் உயிரிழந்துவிட்டார். துப்பாக்கிச்சூடு நின்றபின் அந்த வீட்டை சோதனையிட்ட பொலிசார், வீட்டுக்குள் அந்த நபர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டுள்ளார்கள்.
உயிரிழந்த நபர் ஒரு வேட்டைக்காரர், அவரிடமிருந்த ஆயுதங்களை கைப்பற்ற அதிகாரிகள் சென்றபோது, அவர் தான் வைத்திருந்த ஆயுதங்களை கொடுக்கமுடியாது என மறுத்துள்ளார்.
அவற்றைக் கைப்பற்றும் முயற்சியில் பொலிசார் ஈடுபட, அவர் பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட, கடைசியில் பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார்.