பிரித்தானியாவில் பிக்னிக் சென்ற இடத்தில் குழந்தையைத் தீண்டிய பாம்பு: பின்னர் நடந்தது...
பிரித்தானியாவில் தனது குடும்பத்துடன் பிக்னிக் சென்ற 8 வயது சிறுமியை பாம்பு ஒன்று தீண்டியது.
Kinver Edge என்ற இடத்துக்கு ஒரு குடும்பம் பிக்னிக் சென்றிருந்த நிலையில், அந்தப் பகுதியில் ஒரு பாம்பு நடமாடுவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த குறும்புக்கார சிறுமியோ, அந்தப் பாம்பைத் தன் விரலாலேயே தொட்டுப் பார்த்திருக்கிறாள். பொதுவாக பாம்புகள் மனிதர்கள் நெருங்கும்போது விலகிச் செல்லவே பார்க்கும். ஆனால், இந்தப் பாம்போ விலகாமல் அந்தச் சிறுமியின் சுட்டு விரலைக் கொத்தியிருக்கிறது.
உடனே சிறுமியின் தந்தையான David Rathbone, ஓடோடிச் சென்று மகளைத் தூக்கி, அவளது விரலை வாய்க்குள் வைத்து இரத்தத்தை உறிஞ்சியிருக்கிறார். அதற்குள் அந்தப் பாம்பு Davidஐயும் தீண்டியிருக்கிறது.
சிறுமிக்கு கை வலி அதிகரிக்கவே, உடனடியாக காரில் ஏறி தந்தையும் மகளுமாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் செல்ல, அதற்குள் சிறுமியின் கை முழுவதுமே வீங்கி விட்டிருக்கிறது.
அந்த மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டதும், பர்மிங்காம் சிறுவர் நல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளாள் அந்தச் சிறுமி.
அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவள் நன்றாக இருப்பதாக உணர்வதாக தெரிவித்துள்ளார் அவளது தந்தை. இருந்தாலும், மருத்துவர்கள் அவளைத் தங்கள் கண்காணிப்பில் வைத்துள்ளார்கள்.