கிச்சு கிச்சு மூட்டும் மகாராணியின் ஆவி... பிரித்தானிய புராதன விடுதியில் தங்குவோரின் வித்தியாசமான அனுபவம்
பிரித்தானியாவில், முதலாம் மேரி என்று அழைக்கப்படும் மகாராணி ஒருவர் வாழ்ந்த வீடு ஒன்று, தற்போது தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.
அதை Lesley Reynolds என்பவர் வாங்கி, தங்கும் விடுதியாக மாற்றியுள்ளார். அங்கு தங்குவதற்கு நாளொன்றிற்கான கட்டணம் 600 பவுண்டுகள் ஆகும்.
ஆனால், அங்கு தங்க வருபவர்கள் வித்தியாசமான அனுபவங்களை சந்திப்பதாக அரசல் புரசலாக செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன.
Lesleyயின் பேத்தியே ஒரு நாள் அந்த கட்டிடத்திலுள்ள 16 படுக்கையறைகளில் ஒன்றில் தூங்கிக்கொண்டிருக்கும்போது, யாரோ தன் கால்களில் கிச்சுக்கிச்சு மூட்டுவதாக தெரிவித்திருக்கிறாள். அத்துடன், ராணி மேரி மென்மையாகத்தான் நடந்துகொள்கிறார் என்றும் கூறியிருக்கிறாள் அந்த குழந்தை.
இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அது உண்மையா என்பதைக் கண்டறிவதற்காக ஆவிகளுடன் பேசுபவரான Lee Whyberd என்பவர் அங்கு சென்று தங்கியிருக்கிறார். ஆனால், அவர் சந்தித்த அனுபவம் மென்மையாக இல்லை!
தன்னை யாரோ மெத்தையுடன் சேர்த்து கழுத்தைப் பிடித்து அழுத்தியது போல இருந்ததாகவும், தன்னால் எழுந்திருக்கமுடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சிலர் ராணி மேரி அச்சுறுத்தும் விதத்தில் பின்னால் வந்து மேலே உரசியபடி நின்றதாக தெரிவிக்கிறார்கள். வேறு சிலர் அவரது உருவம் கண்ணாடியில் தெரிந்ததாக கூறியுள்ளார்கள்.
ராணி மேரியின் வீடு, 1590ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. அவர் 1553 முதல் 1558 வரை பிரித்தானியாவை ஆட்சி செய்திருக்கிறார். கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த மேரி, தன் சபைப் பிரிவைச் சேர மறுத்த, புரொட்டஸ்டன்ட் சபைப் பிரிவைச் சேர்ந்த 280 பேரை தீவைத்துக் கொளுத்த உத்தரவிட்டதால் ’Bloody Mary’ என்று அழைக்கப்படுகிறார்.
இதற்கிடையில், ராணி மேரி, வீட்டில் தங்க வரும் யாரையும் தொந்தரவு செய்யவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால், அவள் வீட்டுக்கு வருபவர்களை பயமுறுத்தத் தொடங்கினால் நடவடிக்கை எடுக்கவேண்டியதுதான் என்கிறார் அந்த கட்டிடத்தின் தற்போதைய உரிமையாளரான Lesley.