பிரித்தானியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகும்: எச்சரிக்கும் அறிவியலாளர்கள்: ஆனால்...
அடுத்த திங்கட்கிழமை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை நெகிழ்த்த இருப்பதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
மே 17 முதல் பிரித்தானியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட உள்ளன. அதன்படி, வெளியிடங்களில் 30 பேர் வரை ஒரு குழுவாக சந்தித்துக்கொள்ளலாம், வீடுகளுக்குள் 6 பேர் அல்லது இரு குடும்பத்தினர் சந்தித்துக்கொள்ளலாம்,
உணவகங்கள் முதலானவற்றில் அமர்ந்து சாப்பிட அனுமதி, திரையரங்குகள் இயங்க அனுமதி, மக்கள் தங்கள் அன்பிற்குரியவர்களை கட்டியணைத்து அன்பைப் பகிர்ந்துகொள்வது என பல்வேறு விடயங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படி கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படுவதால் மூன்றாவதாக ஒரு கொரோனா அலை உருவாக வாய்ப்பு உள்ளது என அரசின் ஆலோசனைக்குழுவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அதே நேரத்தில், இந்த மூன்றாவது அலை, 2020இல் உருவான முதல் இரண்டு அலைகளைப்போல் மோசமானதாக இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த முறைகளைப்போலல்லாமல், இம்முறை அதிக நேர்மறை எண்ணங்களுடன் தாங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்த தடுப்பூசி திட்டம் மற்றும் வெதுவெதுப்பான பருவநிலை ஆகியவை கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கும் என்றும், முதல் இரண்டு அலைகளின்போது இருந்ததைவிட, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அறிவியலாளர்களின் துணைகுழு ஒன்று இங்கிலாந்தில் R எண் 1ஐ விட அதிகமாக
இருக்கும் என கணித்துள்ளது.
அதன் பொருள் என்னவென்றால், கொரோனா தொற்றுக்கு ஆளான ஒருவர் மற்றொருவர் அல்லது
அதற்கு மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்றை பரப்புவார்கள் என்பதாகும்!