கொரோனா காலகட்டத்தால் ஜேர்மனியில் ஏற்பட்ட மோசமான விளைவு
கொரோனா காலகட்டம் தீவிரவாத எண்ணங்களை அதிகரிக்கச் செய்துள்ளதாக ஜேர்மனியின் உள்நாட்டு உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பெர்லினில், உள் நாட்டு உளவுத்துறை ஏஜன்சியின் வருடாந்திர அறிக்கையை வெளியிட்ட ஜேர்மன் உள்துறை அமைச்சரான Horst Seehofer, கடந்த ஆண்டில் ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாதமும் இடதுசாரி தீவிரவாதமும் அதிகரித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
இதில் அச்சுறுத்தும் விடயம் என்னவென்றால், 33,000 வலதுசாரி தீவிரவாதக் கருத்துக்கொண்டோரில், 40 சதவிகிதத்தினர் வன்முறை எண்ணம் கொண்டோர் என தெரியவந்துள்ளதுதான்.
இதுவரை உள்ளதிலேயே இது அதிக எண்ணிக்கை என்பதுடன், கடந்த ஆண்டைக் காட்டிலும் வலது சாரி வன்முறைக் குற்றங்கள் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இடதுசாரி தீவிரவாதக் கருத்துக்கள் கொண்டோரின் எண்ணிக்கையும் 2019இல்
33,500 ஆக இருந்தது, 2020இல் 34,300 ஆக அதிகரித்துள்ளது என்றும் உளவுத்துறை
கண்டறிந்துள்ளது.
அதேபோல், இடதுசாரி வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க
அளவில் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.