கொரோனா பரவத்தான் செய்யும்... ஆனால்: பிரித்தானிய அறிவியலாளரின் நம்பிக்கையூட்டும் செய்தி
பிரித்தானியாவில், கொரோனாவின் மூன்றாவது அலை தொடர்பாக அறிவியலாளர்கள் பலர் எதிர்மறையான, அச்சமூட்டும் செய்திகளை வழங்கியவண்ணம் உள்ள நிலையில், ஒருவர் மட்டும் நம்பிக்கையூட்டும் ஒரு செய்தியை அளித்துள்ளார்.
சமீபத்தில், பிரித்தானிய தடுப்பூசி ஆணையத்தின் உறுப்பினரான பேராசிரியர் ஜெரமி பிரௌன் என்பவர், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கொரோனாவின் மூன்றாவது அலை 30,000 முதல் 50,000 பேரை பலிவாங்கும் என்று கூறி திகிலை ஏற்படுத்தியிருந்தார்.
அவர் மட்டுமில்லை, பல அறிவியலாளர்கள் எதிர்மறையான செய்திகளையே அளித்துவந்தார்கள். இந்நிலையில், பேரிடர் மேலாண்மை நிபுணரான பேராசிரியர் பிலிப் தாமஸ் என்பவர், சற்று வித்தியாசமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
வரும் மாதங்களில் தொற்று அதிகரிக்கத்தான் செய்யும் என்று கூறும் தாமஸ், ஆனால், அது மிகக்குறைந்த அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இறப்பு வீதம் மிகக்குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் தடுப்பூசித் திட்டத்தின் மாபெரும் வெற்றி என்று கூறியுள்ள தாமஸ், அதன் பொருள் என்னவென்றால், ஜூன் மாதம் வாக்கில் பெரும்பாலானோர் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடுவார்கள் என்பதுதான் என்கிறார்.
உண்மை என்னவென்றால், நம்மைத் தாக்கிய கொள்ளைநோயை நாம் திருப்பித் தாக்கிக்கொண்டிருக்கிறோம் என்று கூறும் தாமஸ், நாம் கோடையை நோக்கிச் செல்லச் செல்ல, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துக்கொண்டே செல்லும்.
சொல்லப்போனால், கட்டுப்பாடுகளைக்கூட நெகிழ்த்த இயலும் என தான் கருதுவதாக தெரிவிக்கிறார் பேராசிரியர் தாமஸ். தான் உருவாக்கியுள்ள கணித மாதிரி முதலான பல விடயங்களை ஒப்புநோக்கும்போது, தனது கணிப்பு சரியாக இருக்கும் என்கிறார் தாமஸ்.
இதேபோல், 1990களில் Mad Cow Disease மற்றும் Creutzfeldt-Jakob disease என்னும் நோய்கள் பரவத்தொடங்கியபோது, 20 முதல் 520 உயிர்கள் பலியாகும் என கணித்திருந்தார் தாமஸ். ஓரளவு சரியாகச் சொல்லவேண்டுமானால், 130 பேர் உயிரிழக்கலாம் என்று கூறியிருந்தார் தாமஸ்.
அதேபோலவே, அந்த காலகட்டத்தில், 180 பேர் மட்டுமே பலியாகியிருந்தார்கள். ஆகவே, அப்போது தான் கணித்தது சரியாக இருந்தது போலவே, இப்போதும் சரியாக இருக்கும் என்கிறார் தாமஸ்.
பேராசிரியர் தாமஸின் கணிப்பு உண்மையாகும் பட்சத்தில், உண்மையாகவே அது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு விடயமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.