இன்று முதல் ஜேர்மனியில் பணிக்கு வருவோருக்கு நிறுவனங்கள் இதை இலவசமாக செய்யவேண்டும்: புதிய விதிமுறை
இன்று செவ்வாய்க்கிழமை முதல், ஜேர்மனியில் வீட்டிலிருந்து பணி செய்யாமல் அலுவலகங்களுக்கு வருவோருக்கு, அவர்கள் பணி செய்யும் நிறுவனங்கள் கொரோனா பரிசோதனை கிட்களை வாங்கவேண்டும்.
அதுவும் இலவசமாக... இன்று முதல் ஜேர்மனியில் அலுவலகங்களுக்கு பணி செய்ய வருவோருக்கு, அவர்கள் பணி செய்யும் நிறுவனங்கள், அவர்கள் தாங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளும் வசதியிலான பரிசோதனை கிட்களை வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணியாளர்கள், வாரத்துக்கு ஒரு முறையாவது அந்த கிட்களை பயன்படுத்தி கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். பரிசோதனை கிட்களுக்கான செலவை பணி வழங்கும் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அவ்வாறு பரிசோதனை செய்வதற்காக கிட்களை வழங்காத நிறுவனங்களுக்கு 30,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
அதே நேரத்தில், அந்த கிட்களை பயன்படுத்தி பரிசோதனை செய்துகொள்வதா இல்லையா என்பதை பணியாளர்கள் முடிவு செய்யும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளிலிருந்தவண்ணமே 56 சதவிகித பணியாளர்கள் பணியாற்ற முடியும் என்ற நிலை இருந்தபோதிலும், பலர் பணி செய்வதற்காக அலுவலகங்களுக்கு வருவது சமீபத்தைய ஆய்வு ஒன்றில் தெரியவந்ததையடுத்தே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விதிமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா பரவல் மோசமான நிலையில் உள்ள நிலையிலும், பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகளைக் கூட செய்து தராமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் இது குறித்து பேசிய ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல்,
நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடி பணி செய்வதை அனுமதிக்காமலும், ஒழுங்காக கொரோனா
பரிசோதனைகள் செய்யாமலும் இருப்பதைத் தொடர்ந்தால், அரசு கடும் நடவடிக்கை
எடுக்கும் என்று எச்சரித்திருந்தார்.
அதுதான் இப்போது நடந்துள்ளது...