என்னை தவறாக சித்தரித்துவிட்டார்கள்... ஒலிம்பிக்கில் தண்ணீர் போத்தல்களை தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பிரான்ஸ் வீரர்
ஒலிம்பிக்கில், ஓட்டப்பந்தயத்தின்போது தண்ணீர் போத்தல்களை வேண்டுமென்றே தள்ளிவிட்டதாக விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள பிரான்ஸ் வீரர், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
ஆண்களுக்கான ஒலிம்பிக் மாரத்தான் போட்டியின்போது பிரான்ஸ் சார்பில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றவர் Morhad Amdouni (33).
கிட்டத்தட்ட பந்தயம் முடிவடையும் தருவாயில், களைத்துப்போயிருந்த வீரர்கள், ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் போத்தல்களை ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டபடி தங்கள் ஓட்டத்தைத் தொடர்ந்தனர்
அப்போது, அவர்களுக்குப் பின்னால் ஓடி வந்த Amdouni, வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த தண்ணீர் போத்தல்களை கையால் கீழே தள்ளிவிட்டபடியே ஓடினார்.
அதனால், அவருக்குப் பின்னால் வந்த வீரர்களுக்கு தண்ணீர் கிடைக்காத ஒரு சூழல் உருவானது. இந்த காட்சி இணையத்தில் வைரலாக தனக்குப் பின்னால் வந்த வீரர்களுக்கு தண்ணீர் கிடைக்கக்கூடாது என்பதற்காகவே Amdouni தண்ணீர் போத்தல்களை தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால், அது தற்செயலாக நடந்தது என்று கூறியுள்ள சிலர், அதற்கு அடுத்ததாகவும் ஒரு மேஜையில் தண்ணீர் போத்தல்கள் இருந்ததாகவும், வீரர்கள் அந்த மேஜையிலிருந்தும் தண்ணீரை எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தது என்றும் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில், தான் வேண்டுமென்றே தண்ணீர் போத்தல்களை தள்ளிவிடவில்லை என Amdouni கூறியுள்ளார்.
தன்னை மோசமாக விமர்சித்தவர்களை பதிலுக்கு கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ள Amdouni, தான் தண்ணீர் போத்தல் ஒன்றை எடுக்க முயன்றதாகவும், அந்த தண்ணீர் போத்தல்கள் ஈரமாக இருந்ததால் வழுக்கியதாகவும், அதனால்தான் அவற்றை எடுக்க முயன்றபோது அவை கீழே விழுந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் போத்தல்கள் பிரெஷ் ஆக இருப்பதற்காக அவற்றை தண்ணீரில் மூழ்கவைத்து எடுத்து வைத்திருந்ததாகவும், ஆகவே அவை வழுக்கக்கூடியதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது கூற்றுக்கு ஆதரவாக பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள Amdouni, அதில், அவரது கை போத்தலை எடுக்கும்போது வழுக்குவதை ஜூம் செய்து காட்டி, அந்த வீடியோ தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதாக தெரிவித்துள்ளார்.