உண்டியலில் கை மாட்டிக்கொண்டதால் இரவு முழுவதும் கோவிலில் இருந்த நபர்
உண்டியலில் திருட முயன்ற போது, கை மாட்டிக்கொண்டதால் இரவு முழுவதும் கோவிலிலே இருந்துள்ளார்.
உண்டியல் திருட்டு
கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் நகை, பணம் ஆகியவற்றை, உண்டியலை உடைத்து திருடர்கள் திருடி செல்வது நடந்து வந்தது.
தற்போது பெரும்பாலான கோவில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், உண்டியல் திருட்டு சம்பவங்கள் குறைந்துள்ளது. ஆனால், சிசிடிவி கேமராக்கள் இல்லாத சிறிய கோவில்களில் அவ்வப்போது உண்டியல் நடைபெறுகிறது.
அதே போல், தர்மபுரியில் உள்ள கோவில் ஒன்றில், உண்டியலில் இருந்த பணத்தை திருட முயன்ற நபர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள சேஷம்பட்டி கிராமத்தில் உள்ள பெரியாண்டிச்சி கோயில் உண்டியலில் ஒரு நபர் நேற்று முன்தினம் இரவு திருட முயன்றுள்ளார்.
உண்டியலில் சிக்கிய கை
கையை உண்டியலின் உள்ளே விட்டு, அந்த நபர் பணத்தை எடுக்க முயன்றுள்ளார். அதன் பிறகு, அவரது கையை வெளியே எடுக்க முடியவில்லை.
இதன் காரணமாக இரவு முழுவதும், உண்டியலின் உள்ளே கையை வைத்துக்கொண்டே அந்த இடத்தில் அமர்ந்துள்ளார்.
மறுநாள் காலை அந்த வழியாக சென்ற மக்கள், உண்டியலின் உள்ளே கை சிக்கியிருந்த நிலையில், அவர் அமர்ந்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இயந்திரம் மூலம் உண்டியலை வெட்டி, அந்த நபரின் கையை உண்டியலில் இருந்து வெளியே எடுத்தனர். மேலும், அந்த உண்டியலில் ரூ.500 மட்டுமே இருந்தது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த தங்கராஜ்(43) என்பதும், கூலி தொழிலாளியான அவர், சிறுசிறு திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |