பூஸ்டர் தடுப்பூசி எப்போது செலுத்திக் கொள்ளலாம்? வெளியான முக்கிய தகவல்
கொரோனா வைரசுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உலகின் பல நாடுகள் பரிந்துரைக்கின்றன.
இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசிகள் எப்போது செலுத்திக் கொள்ளலாம் என சந்தேகம் மக்களிடையே இருந்து வருகிறது.
இதற்கு பதிலளிக்கும் வண்ணம் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி வழங்கி வருகிற பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா, டி.வி. சேனல் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:-
கொரோனாவுக்கு எதிராக 2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போட்டு 6 மாதங்களான பின்னர் பூஸ்டர் தடுப்பூசி போடுவது சிறந்தது.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பொறுத்தமட்டில், கோவேக்சினை காட்டிலும் நாசி வழியே செலுத்தக்கூடியது நலமாக இருக்கும் என்று கருதுகிறோம்.
ஒட்டுமொத்த உலகமும் நாசி வழியாக செலுத்தக்கூடிய தடுப்பூசிக்காக காத்திருக்கிறது. இது பரவலை தடுக்கும் ஒரே வழியாகும்.
நாங்கள் நாசி வழியே செலுத்தும் தடுப்பூசியை கொண்டு வருகிறோம். கோவேக்சினை முதல் டோசாக தந்து விட்டு, இரண்டாவது டோசாக நாசி வழியாக செலுத்துகிற தடுப்பூசியை தருவது குறித்து சிந்திக்கிறோம்.
கொரோனா பாதித்தவர்களுக்கு அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இது நன்றாக வேலை செய்யும் என தெரிவித்துள்ளார்.