"இன்னும் 6 வாரங்களில் 3-வது அலை இந்தியாவை தாக்கும்" - எய்ம்ஸ் தலைமை மருத்துவர் எச்சரிக்கை
இன்னும் 6 முதல் 8 வாரங்களில் கோவிட் மூன்றாவது அலை இந்தியாவை தாக்கும் என எய்ம்ஸ் தலைமை மருத்துவர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை "தவிர்க்க முடியாதது" என்றும், இது அடுத்த 6 முதல் 8 வாரங்களில் நாட்டைத் தாக்கும் என்று என்டிடிவி உடனான நேர்காணல் எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், பல வாரங்களாக விதிக்கப்பட்டிருந்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திவருகின்றன.
இந்த சூழ்நிலையில், "நாம் உறடங்கை தளர்த்துவது, பொருத்தமான செயல் அல்ல. இது முதல் மற்றும் இரண்டாவது அலைக்கு இடையில் என்ன நடந்தது என்பதிலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது.
தளர்வுகளால் மீண்டும் கூட்டங்கள் உருவாகின்றன. மக்கள் எல்லா இடங்களிலும் கூடிவருகிறார்கள். இதனால், தேசிய அளவில் தொற்று எண்ணிக்கை உயரத் தொடங்கும். அதற்கு சிறிது காலம் ஆகலாம், ஆனால் இது அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்குள் நிகழக்கூடும்" என்று டாக்டர் குலேரியா எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் "இது அனைத்தும் கோவிட்-பொருத்தமான நடத்தை (Covid-appropriate behaviour) மற்றும் கூட்டத்தைத் தடுப்பது ஆகியவற்றின் அடிப்படையில் நாம் எவ்வாறு முன்னேறுகிறோம் என்பதைப் பொறுத்தது" என்று அவர் மேலும் கூறினார்.
இரண்டாவது அலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி இந்தியாவை அலறவைத்தது. இந்தியாவின் இந்த பற்றாக்குறை உலகின் முழு கவனத்தையும் ஈர்த்தது மற்றும் பல நாடுகள் உதவியுடன் முன்வந்தன.
பல்வேறு மாநிலங்கள் பல வாரங்கள் கடுமையான ஊரடங்கை அனுபவித்த பிறகு, தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது அலைக்கு எதிரான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.