இந்த இரண்டு வீரர்களுடன் விளையாடாமல் போனது... எனக்கு கொஞ்சம் கவலையா இருக்கு: சச்சின் ஓபன் டாக்
இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனக்கு இரண்டு கவலைகள் அவ்வப்போது இருந்து கொண்டே இருப்பதாக கூறியுள்ளார்.
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இந்நிலையில், இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அதில், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இரண்டு வருத்தங்கள் உண்டு. ஒன்று சுனில் கவாஸ்கருடன் இணைந்து நான் ஒரு போதும் விளையாடியதில்லை. இளம் வயதில் அவர் தான் எனது பேட்டிங் ஹீரோ. நான் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிப்பதற்கு 2 ஆண்டுக்கு முன்பாக அவர் ஓய்வு பெற்று விட்டார்.
இதனால் அணியில் ஒரு வீரராக அவருடன் இணைந்து ஆட முடியாமல் போனது.
மற்றொன்று, மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்சுக்கு எதிராக விளையாடாமல் போனது தான்.
அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதிராக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடியிருக்கிறேன். ஆனால் சர்வதேச களத்தில் அவரை எதிர்த்து விளையாட முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தம் இன்றளவும் உண்டு என்று கூறியுள்ளார்.