"ஒரே வெட்டு, தலை துண்டானது" நண்பனை வெட்டிக் கொன்ற சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்!
தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் தான் காதலித்த அதே பெண்ணை காதலித்ததால், ஆத்திரத்தில் நண்பனை வெட்டிக் கொன்ற 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்தவர் பொய்யாமொழி மகன் மதன்குமார் (21). பெயின்டர் வேலை பார்க்கும் இவர், கடந்த 30-ஆம் திகதி மந்தித்தோப்பு காட்டு பகுதியில் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
கொலையாளிகளை பிடிக்க எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டிஎஸ்பி உதயசூரியன் மேற்பார்வையில் மேற்கு இன்ஸ்பெக்டர் சபாபதி, நாலாட்டின்புதூர் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, எஸ்ஐக்கள் குருசந்திரவடிவேல், துரைச்சாமி மற்றும் பொலிஸார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளியை தேடிவந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக தனிப்படை பொலிஸார் விசாரணை நடத்தி, கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டடியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் காதல் போட்டியில் அவர் மதன்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. அச்சிறுவனிடம் இருந்து அரிவாள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, பொலிஸிடம் அச்சிறுவன் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நானும், மதன்குமாரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாகவே பெயின்டர் வேலைக்கு செல்வோம். நான் ஒரு இளம்பெண்ணை காதலித்தேன். அதே பெண்ணை அவனும் காதலித்து வந்துள்ளான். இந்த விவரம் எனக்கு தெரியாது.
சில தினங்களுக்கு முன் நான் அவனது செல்போனை வாங்கி பார்த்தபோது அந்த இளம்பெண்ணுடன் அவன் சாட்டிங் செய்திருப்பது தெரியவந்தது. இதனால் நான், மதன்குமாரை கண்டித்தேன். ஆனாலும் அவன் கேட்கவில்லை. நான் காதலிக்கும் பெண்ணை, மதன் குமாரும் காதலித்ததால் அவனை அவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன்.
அதன்படி சம்பவத்தன்று மந்தித் தோப்பு காட்டுப்பகுதிக்கு முன் கூட்டியே சென்று அங்குள்ள முட்செடியில் அரிவாளை மறைத்து வைத்தேன். அதன் பிறகு பைக்கில் கோவில்பட்டி வந்து மது குடிக்க செல்வோம் என்று கூறி மதன் குமாரை பைக்கில் மந்ததித்தோப்பு காட்டு பகுதிக்கு அழைத்து வந்தேன். அங்கு வைத்து இருவரும் மது அருந்தினோம்.
அதன்பிறகு நான், சிறுநீர் கழித்து வருவதாக மதன்குமாரிடம் கூறிச் சென்றேன். பின்னர் நான், ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்தேன். அப்போது அவன் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தான்.
பின்னால் வந்த நான், மதன்குமாரின் கழுத்தில் ஓங்கி அரிவாளால் வெட்டினேன். இதில் அவன், தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்தான். அதன் பிறகு அரிவாளை அங்குள்ள கண்மாயில் வீசி விட்டு தப்பிச் சென்று விட்டேன்.
நான், கதிரேசன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள புலிக்குகை பகுதியில் பதுங்கியிருந்த போது பொலிஸார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர், வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.