ஜேர்மனியில் ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: ஆயிரக்கணக்கான ரயில்கள் ரத்து
ஜேர்மனியில் ரயில் சரதிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், நாடு முழுவதும் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியில் ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்
ஜேர்மன் ரயில் சாரதிகள் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ள 'எச்சரிக்கை வேலைநிறுத்தம்' காரணமாக, வெள்ளிக்கிழமை 80 சதவிகித நீண்ட தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன் உள்ளூர் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது, சமீபத்திய வாரங்களில் தொழிற்சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட இரண்டாவது வேலைநிறுத்தம் ஆகும். ஏற்கனவே, நவம்பர் 15 மற்றும் 16 திகதிகளில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தால், 80 சதவிகித தொலைதூர மற்றும் உள்ளூர் ரயில்வே சேவைகள் பாதிக்கப்பட்டன.
picture alliance/dpa | Bodo Marks
இதற்கிடையில், மீண்டும் வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை மீண்டும் வேலைநிறுத்தத்தில் இறங்கினர் ரயில்வே சாரதிகள். வேலைநிறுத்தம் முடிவடைந்த பின்னரும், சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சிறிது நேரம் எடுக்கும் என்பதால், வார இறுதி முழுவதும் ரயில் பயணங்களுக்கு இடையூறு ஏற்படலாம்.
எதற்காக இந்த வேலைநிறுத்தம்?
ஜேர்மனியின் GDL தொழிற்சங்கம், ரயில் சாரதிகளின் வேலை நேரத்தை, வாரத்திற்கு 38 மணி நேரத்திலிருந்து 35 மணிநேரமாக குறைக்க விரும்புகிறது, அதுவும் சம்பளப் பிடித்தம் எதுவும் இல்லாமலே வேலை நேரம் குறைக்கப்படவேண்டும் என சாரதிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
அத்துடன், மாதத்திற்கு 555 யூரோக்கள் சம்பள உயர்வு மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க வரி இல்லாத 3,000 போனஸும் கோருகிறார்கள் ரயில்வே சாரதிகள்.
picture alliance/dpa | Matthias Balk
அரசோ, 11 சதவீத ஊதிய உயர்வும் 2,850 யூரோ வரை பணவீக்க போனஸையும் வழங்குவதாகக் கூறுகிறது, ஆனால் வேலை நேரத்தை குறைக்க சம்மதிக்கவில்லை.
ஆனால், தங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லையென்றால் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளது ரயில்வே பணியாளர்கள் தொழிற்சங்கம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |