மத்திய கிழக்கு நாடொன்றில் மாயமான 3 இந்தியர்கள்... குடும்பத்தினரை தொடர்பு கொண்ட தூதரகம்
இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஈரானுக்கு பயணப்பட்ட மூவர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காணவில்லை
குறித்த தகவலை உறுதி செய்துள்ள தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், அவர்களை அவசரமாக கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
காணாமல் போன மூன்று பேரும் ஹுஷன்பிரீத் சிங் (சங்ரூர்), ஜஸ்பால் சிங் (எஸ்பிஎஸ் நகர்) மற்றும் அம்ரித்பால் சிங் (ஹோஷியார்பூர்) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர்கள் மூவரும் மே 1 அன்று தெஹ்ரானில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே காணாமல் போனார்கள். தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானுக்குப் பயணம் செய்த 3 இந்தியர்களின் குடும்பத்தினர், தங்கள் உறவினர்களைக் காணவில்லை என்று இந்தியத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தை ஈரானிய அதிகாரிகளிடம் தூதரகம் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது, மேலும் காணாமல் போன இந்தியர்களை அவசரமாக கண்டுபிடித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் தூதரகம் எடுக்கும் முயற்சிகள் குறித்து குடும்ப உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து தகவல்களைத் தெரிவித்து வருகிறது. பஞ்சாபில் உள்ள முகவர் ஒருவர், துபாய்-ஈரான் வழியாக மூன்று பேரையும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக உறுதியளித்திருந்ததாக கூறப்படுகிறது.
கடத்தல்காரர்கள்
அவர்களுக்கு ஈரானில் தங்க இடம் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் மே 1 ஆம் திகதி அவர்கள் ஈரானில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே, அவர்கள் கடத்தப்பட்டனர்.
இதனிடையே, கடத்தல்காரர்கள் ரூ.1 கோடி மீட்கும் தொகையை கேட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். பணம் அனுப்பாவிட்டால் மூவரையும் கொன்றுவிடுவதாக அவர்கள் மிரட்டியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் மே 11ம் திகதி முதல் அந்த மூவர் தொடர்பில் தங்களுக்கு தகவல் ஏதும் இல்லை என்றும் அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அந்த மூவரையும் அனுப்பி வைத்த முகவர் தற்போது மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |