உலகப் போரை தூண்டும் மூன்று அச்சுறுத்தல்கள்: பிரித்தானிய அமைச்சர் வெளியிட்ட தகவல்
ரஷ்யா, மத்திய கிழக்கில் ஏவுகணை தாக்குதல், சீனாவின் ரகசிய நடவடிக்கைகள் என மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய அமைச்சர் ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
எதிரிகளை எதிர்கொள்ள
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவிக்கையில், சர்வதேச நாடுகளின் உறவுகள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
@reuters
நமது எதிரிகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், நமது நட்பு நாடுகளை வழிநடத்தத் தயாராக இருக்க வேண்டும் என்றும், அழைப்பு வரும்போதெல்லாம் நம் தேசத்தைப் பாதுகாக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் நாடுகளால் பெரும் அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பகுத்தறிவற்றவர்கள் என்றும் சாடியுள்ளார். போர் தொடர்பில் பிரித்தானிய அரசியல்வாதிகள் குறிப்பிடுவது இது முதல்முறையல்ல.
கடந்த ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவிக்கையில், 2030ல் பிரித்தானியா போரை முன்னெடுக்கும் சூழலில் இருக்கும் என்றார். மூன்று நாட்களில் முடிவுக்கு வரும் என கூறப்பட்ட ரஷ்ய - உக்ரைன் போர் தற்போது 700 நாட்களை நெருங்கி வருகிறது.
@getty
சமீபத்தில் உக்ரைன் சில பிராந்தியங்களை மீட்டாலும், அபாயம் இன்னும் நீடித்தே வருகிறது. ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் உலக நாடுகளின் மொத்த கவனமும் மத்திய கிழக்கில் உள்ளது.
காஸா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக நேரிடையாக களத்தில் இறங்காத ஈரானிய ஆதரவு ஹவுதி படைகள் செங்கடலில் வணிக கப்பல்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
போர் நிறுத்தம் தொடர்பில்
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவே இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அந்த அமைப்பு விளக்கமளித்துள்ளது. வணிக கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காவதால், பல நாடுகள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட எந்த நாடும் இதுவரை போர் நிறுத்தம் தொடர்பில் இஸ்ரேலிடம் கோரிக்கை விடுக்கவில்லை. மாறாக ஏமன் நாட்டில் ஹவுதிகள் மீது பிரித்தானியாவும் அமெரிக்காவும் தாக்குதல் முன்னெடுத்துள்ளன.
@getty
இதனிடையே, சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே சமீப ஆண்டுகளாக பதட்டம் அதிகரித்து வருகிறது. ஜனவரி தொடக்கத்தில் Lai Ching-te என்பவரை நாட்டின் புதிய ஜனாதிபதியாக தைவான் மக்கள் தெரிவு செய்தனர். ஆனால் Lai Ching-te ஒரு கடும்போக்காளர், பிராந்தியத்தில் அமைதியைக் கெடுப்பார் என சீனா குறிப்பிட்டுள்ளது.
உலகில் 13 நாடுகள் மட்டுமே தைவானை ஒரு நாடாக அடையாளம் கண்டுள்ளது. சீனாவுக்கு பயந்து பல நாடுகள் வெளிப்படையாக குறிப்பிடவும் தயங்கி வருகிறது. பிரித்தானியாவும் தைவானை ஒரு நாடாக அடையாளப்படுத்த முடியாது என்றே கூறி வருகிறது.
இருப்பினும் தைவானுடன் நெருக்கமான உறவையே பிரித்தானியா காப்பாற்றி வருகிறது. ஆனால் தீவிர போர் பயிற்சிகளை முன்னெடுத்துவரும் சீனா, தைவான் மீது படையெடுக்குமா என்பதில் உறுதியான பதில் இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நெருக்கடியான சூழலில், ஆண்டின் முதல் 6 மாதங்களில் மொத்தம் 20,000 வீரர்களை ஐரோப்பாவில் களமிறக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளது. மட்டுமின்றி கடந்த ஓராண்டில் மட்டுன் பாதுகாப்புக்கு என 50 பில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா செலவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |