மர்மமான முறையில் இறந்த 3 பெண்கள்: அதிர்ச்சியூட்டும் கூற்றுகளை முன்வைக்கும் குடும்பத்தினர்
அமெரிக்காவில் ஹொட்டல் ஒன்றின் அறையில், மூன்று பெண்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில், அவர்களின் குடும்பத்தினர் பொலிஸாரை குற்றம்சாட்டியுள்ளனர்.
மர்மமான முறையில் மரணம்
சான் பெட்ரோவில் உள்ள ராயல் கஹால் கடற்கரை ஹொட்டல் ஒன்றில், கடந்த பிப்ரவரி 22ஆம் திகதி மூன்று பெண்கள் இறந்து கிடந்தனர்.
Kaoutar Naqqad (23), Imane Mallah (24) மற்றும் Wafae EI Arar (26) ஆகிய மூவரும் ஒரே அறையில், கடுமையான நுரையீரல் வீக்கத்தினால் பாதிக்கப்பட்டு இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணையைத் தொடங்கிய பொலிஸார், குறித்த பெண்கள் மூவரும் போதைப்பொருளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டிருக்கலாம் என்று முதலில் கூறினர்.
எனினும் அவர்களின் அறையில் சட்டவிரோத பொருட்கள் எதுவும் காணப்படவில்லை. இது உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினரை ஆத்திரப்படுத்தியது.
இரண்டாவது பிரேத பரிசோதனை
இந்த நிலையில், மூன்று பெண்களின் உடல்கள் Massachusettsக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கு தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகம் இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது.
ஆனால், குறித்த பெண்களின் குடும்பங்கள் பெலிசியன் பொலிசாரின் விசாரணையின் நேர்மையை சந்தேகித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவர்கள் விசாரணை குறித்து கூறுகையில், "பொதுமக்களும் அதிகாரிகளும், குறிப்பாக பெலிஸில் உள்ளவர்கள் இதைக் கேட்க வேண்டும் என்பதற்காக இன்று நாங்கள் பேசுகிறோம். Kaoutar, Imane மற்றும் Wafae ஆகியோர் சிறந்த விசாரணைக்கு தகுதியானவர்கள். பெலிஸ் (Belize) மற்றும் அமெரிக்கா இரண்டிலும் அதிகாரத்தில் உள்ள அனைவரும், இந்த துயரத்திற்கான உண்மையான காரணத்திற்கான பதில்களைக் கோருவதில் எங்களுடன் இணையுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
அவர்களின் மரணம் சந்தேகத்திற்குரியவை என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம். இந்த துயரத்திற்கு என்ன காரணம் என்பது பற்றிய முழு உண்மையையும் நாங்கள் அறிவதை உறுதிசெய்ய, சரியான நேரத்தில் ஆனால் முழுமையான முறையில் தங்கள் மதிப்பாய்வுகளை முடிக்கும் பொறுப்பை அதிகாரிகள் நிறைவேற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றனர்.
நச்சுயியல் அறிக்கை முடிவுகள்
மேலும், பெலிஸில் நடத்தப்பட்ட நச்சுயியல் அறிக்கையின் முடிவுகள் 'இரண்டு வாரங்களில் கிடைக்கும்' என்று கூறப்பட்ட போதிலும், இன்னும் தங்களுக்கு வெளியிடப்படவில்லை என்பது குறித்து கவலைகொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் "ஹொட்டலில் கார்பன் மோனாக்ஸைடு அளவுகள் ஆபத்தான அளவில் உயர்ந்திருக்கலாம் என்றும், ரிசார்ட் இப்போது திடீரென பொதுவிளக்கம் இல்லாமல் மூடப்பட்டுவிட்டது என்றும் கூறும் செய்திகளால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம்.
ரிசார்ட்டின் நிர்வாகமும், பெலிசியன் அதிகாரிகளும் தங்களிடம் உள்ள எந்த தகவலையும், உடனடியாகப் பகிர்ந்துகொள்ளுமாறு நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்" எனவும் கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |