தமிழ்நாட்டின் 3-வது பெரிய கட்சி நாங்க தான்... நாம் தமிழர் கட்சியுடன் மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
தமிழ்நாட்டின் 3-வது பெரிய கட்சி நாம் தமிழர் என தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருவதாக தமிழர்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்ற திமுக கூட்டணி 159 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஓட்டு சதவிதத்தின் அடிப்படையில் திமுக, அதிமுக-விற்கு அடுத்தப்படியாக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 6.85% வாக்குகளை பெற்று தமிழ்நாட்டின் 3வது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது.
திமுக கூட்டணியில் 25 தொகுதியில் போட்டியிட்ட 18-ல் வெற்றிப்பெற்ற காங்கிரஸ் 4.27% வாக்குகள் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் சராசரியாக வாங்கிய வாக்குகளின் அடிப்படையிலும் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்பதை எவரும் மறுக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் சராசரியாக வாங்கிய வாக்குகளின் அடிப்படையிலும் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்பதை எவரும் மறுக்க முடியாது...
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) May 6, 2021
தலைவர் திரு @KS_Alagiri pic.twitter.com/J9R2UtTLXL
கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் முக்கிய அம்சங்கள்: 25 இடங்களில் போட்டியிட்டு, 18 இடங்களில் 72 சதவிகித வெற்றி பெற்று, ஒரு தொகுதியில் 80 ஆயிரம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் 3வது பெரிய கட்சியா? ஒரு தொகுதியில் சராரசியாக 13 ஆயிரம் வாக்குகள் மட்டுமே வாங்கிய நாம் தமிழர் கட்சி 3வது பெரிய கட்சியா?
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் சராசரியாக வாங்கிய வாக்குகளின் அடிப்படையிலும் 3வத பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்பதை எவரும் மறுக்க முடியாது.
தகவல்களின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி தான் 3வத பெரிய கட்சி என்று ஒருசில ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது.
தேர்தலில் சீமான் போட்டியிடுவதும், தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கும் பின்னாலே இருக்கிற மர்ம ரகசியத்தை இளைஞர்கள் விரைவில் புரிந்து கொண்டு தெளிவு பெறுவார்கள் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.