பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசை தாக்கி முதல்வர் விஜய் அறிக்கை
புதிதாக பதவியேற்ற தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், மத்திய அரசுக்கு எதிராக தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டதை “ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல” எனக் கூறி, உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் விஜய், தனது அறிக்கையில்,
"ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களின் விலையை, குறிப்பாக லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.3 மற்றும் டீசல் ரூ.3 என்ற அளவில் உயர்த்தியுள்ளன. இது ஏற்கத்தக்கதல்ல.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும்போது அதற்கேற்றவாறு பெட்ரோல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைப்பதில்லை. மாறாக லாபத்தினை மட்டும் அந்த நிறுவனங்கள் எடுத்துக்கொள்கின்றன.
ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலியப் பொருட்களின் இந்த விலை உயர்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
இந்த விலை உயர்வு இருசக்கர வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளைப் பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வங்கிக் கடன்பெற்று வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்கள் இதனால் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர்களுடைய பொருளாதாரமும் பாதிக்கப்படும்.
மேலும், இந்தப் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக வாடகை வாகனத்தின் வாடகை உயர்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது அன்றாடப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைவதுடன் ஏழை, எளிய மக்களின் வாங்கும் திறனையும் பாதிப்படையச் செய்யும்.
குறு சிறு தொழில் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் உற்பத்திச் செலவும் அதிகரிப்பதால், சந்தையிலும், ஏற்றுமதியிலும் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, ஏழை எளிய, நடுத்தர மக்கள் மற்றும் குறு சிறு தொழில் நிறுவனங்களைப் பாதிக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளும் மத்திய அரசின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளன.
2022 ஏப்ரல் மாதத்திலிருந்து எரிபொருள் விலை மாற்றம் செய்யப்படவில்லை. 2024 மார்ச் மாதத்தில் மட்டும், லோக்சபா தேர்தலுக்கு முன், ரூ.2 குறைக்கப்பட்டது. இப்போது, உலக சந்தை விலை உயர்வை காரணமாகக் காட்டி, மத்திய அரசு விலை உயர்த்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#FuelPriceHike #TamilNadu #CMVijay #PetrolDiesel #RollbackDemand #IndiaPolitics #ModiGovernment #TNPolitics