நாம் தமிழர் படுதோல்வி! திமுக பிரம்மாண்ட வெற்றி: விஜய் மக்கள் இயக்கம் அசுர வளர்ச்சி
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக, நாம் தமிழர் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் கடந்த 6 மற்றும் 9-ஆம் திகதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இதில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு திமுக, அதிமுக மற்றும் பாமக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். உள்ளூரில் செல்வாக்குள்ள நபர்கள் பலரும் சுயேட்சையாக களமிறங்கினர்.
அதேபோன்று, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு கட்சிகளின் ஆதரவு மற்றும் தங்களது தனிப்பட்ட செல்வாக்குடன் சுயேட்சை சின்னத்தில் போட்டியினர்.
அதன்படி, தேர்தல் நடைபெற்ற மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை 9 ஆகும். மொத்த மாவட்ட ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 140. மொத்த ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 74, மொத்த ஊராட்சி ஒன்றிய வார்டுகளின் எண்ணிக்கை 1381, மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 2,901, மொத்த ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 22,581-ஆக இருந்தது.
இந்த இடங்களுக்கான தேர்தல் தான் கடந்த 6 மற்றும் 9-ஆம் திகதி நடைபெற்றது. இந்த 9 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 79,433 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 2,981 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நடைபெற்று முடிந்த இரண்டு கட்ட தேர்தலில் சுமார் 78 சதவீதம் வாக்குகள் பதிவானது. 14,573 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுகள் மொத்தம் 41,500 வாக்கு பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.
இந்த தேர்தலில் வாக்களித்த மக்கள் ஒவ்வொருவரும் 4 வாக்குகள் அளித்தனர். ஏனெனில், மாவட்ட கவுன்சிலருக்கு ஒரு ஒட்டு, ஒன்றிய கவுன்சிலருக்கு ஒரு ஓட்டு, ஊராட்சி மன்ற தலைவருக்கு ஒரு ஓட்டு, ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு ஒரு ஒட்டு என 4 வாக்குகளை பதிவு செய்தனர்.
ஒருவர் 4 ஓட்டுக்கு மேல் வாக்களிக்க வேண்டும் என்பதால், மின்னணு இயந்திரம் பயன்படுத்தாமல், வாக்குச்சீட்டு முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை 8 மணி முதல் தேர்தல் நடந்த இந்த 9 மாவட்டங்களுக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
வாக்குச் சீட்டு என்பதால், காலையில் துவங்கிய இந்த வாக்கு எண்ணும் பணி இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் இரவு 2 மணி நிலவரப்படி 120 இடங்களுக்கும் அதிகமாக இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
இதில் சில இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக கட்சி 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகளான பாமக, பாஜக, மக்கள்நீதிமய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை.
பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளனர். அதுமட்டுமின்றி 1381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 578 இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது . 103 இடங்களில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கிறது.
வாக்குச்சீட்டு முறையில் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், இன்று காலை வரை வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது இன்று காலை தான் முழு முடிவுகள் விவரமாக தெரியவரும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்பது மாவட்டங்களில் 169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டனர்.
அவற்றில் மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 52 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என விஜய் மக்கள் மன்றப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.