19 ஆண்டுகளுக்கு பிறகு AI உதவியுடன் கொலையாளியை கைது செய்த தமிழ்நாடு பொலிஸார்
TN Police Use AI to Arrest 19 years absconding Accused: கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தலைமறைவான நபரை நவீன AI உதவியுடன் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்து பொலிஸார் அசத்தியுள்ளனர்.
தலைமறைவான குற்றவாளி
2007ம் ஆண்டு சென்னை திருவொற்றியூர் பகுதியில் பாண்டியமணி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா(அப்போது வயது 20) உட்பட 5 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஷேக் அப்துல்லா பொலிஸாரின் கண்களுக்கு சிக்காமல் தலைமறைவானார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்ட நிலையில் தனிப்படை பொலிஸார் 2007ம் ஆண்டு ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.
AI உதவியுடன் அசத்திய பொலிஸார்
கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவர் தற்போது எப்படி இருப்பார் என்பதை ஊகிக்க, பொலிஸார் நவீன ஏஐ உருவ அமைப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.
தொழில்நுட்ப உதவியுடன் தற்போது 39 வயதில் இருக்கும் ஷேக் அப்துல்லாவின் உருவ தோற்றத்தை பொலிஸார் இறுதி செய்தனர்.
இதையடுத்து அந்த புகைப்படங்களை வைத்து சமூக வலைதள கணக்குகள் மற்றும் அவர் முன்பு வசித்த பகுதியில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இறுதியில் 39 வயதான ஷேக் அப்துல்லா திருமுல்லைவாயில் சோழம்பேடு மெயின் ரோடு பகுதியில் தன்னுடைய குடும்பத்தினருடன் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகு திருமுல்லைவாயல் பகுதியில் முகாமிட்ட தனிப்படை பொலிஸார் நேற்று முன்தினம் ஷேக் அப்துல்லாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷேக் அப்துல்லா, நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நவீன AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் 19 ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவான குற்றவாளியை பொலிஸார் கைது செய்து இருப்பது பாராட்டுதலை பெற்று வருகிறது.