சுவிட்சர்லாந்துக்குள் மயோனேஸ் கெட்ச் அப் கடத்திய நபர் கைது
சுவிட்சர்லாந்துக்குள் பெரிய அளவில் மயோனேஸ், கெட்ச் அப், சிப்ஸ் முதலான உணவுப்பொருட்களைக் கடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வித்தியாசமான கடத்தல்
பொதுவாக ஒரு நாட்டுக்குள் போதைப்பொருட்கள், தங்கம் முதலான பொருட்களைக் கடத்த முயன்று கைது செய்யப்படுபவர்கள் குறித்துதான் அதிகம் கேள்விப்படுவோம்.
ஆனால், வித்தியாசமான கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மார்ச் மாதம் 9ஆம் திகதி, ஜேர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்தின் Basel மாகாணத்துக்குள் நுழைந்த வாகனம் ஒன்றை சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளார்கள்.
அப்போது, அந்த வாகனத்துக்குள் 1.5 டன் சிப்ஸ், 75 கிலோ சிக்கன், 100 கிலோ மயோனேஸ் மற்றும் 79 கிலோ கெட்ச் அப் ஆகியவை இருப்பது தெரியவந்துள்ளது.
விடயம் என்னவென்றால், அது உணவுப்பொருட்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் குளிரூட்டப்பட்ட வாகனம் அல்ல, அது ஒரு சாதாரண வாகனம்.
அத்துடன், அந்த பொருட்களுக்கான சுங்க வரியும் செலுத்தப்படவில்லை, அனுமதிக்கப்பட்ட அளவை விட அவை மிக அதிக அளவிலும் இருந்தன.
உணவு பாதுகாப்பு விதிகளும் பின்பற்றப்படாததால், அவை பறிமுதல் செய்யபட்டுள்ளதுடன், அந்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |