கோவில்களில் குவியும் கோடிகள் - இந்தியாவில் அதிக சொத்து வைத்துள்ள கோவில்கள்
இந்தியாவில் உள்ள கோவில்கள் சில பல நூறாண்டுகள் பாரம்பரியம் உடையது. இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் தங்கம், வெள்ளி, ரொக்கமாக பணம் என இதன் சொத்துமதிப்பு பல ஆயிரம் கோடிகளாக உள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் அதிக சொத்துமதிப்புள்ள 10 கோவில்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
பத்மநாபசுவாமி கோவில், கேரளா
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள பத்மநாபசுவாமி கோவிலில், கடந்த 2011 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, பாதாள அறைகள் திறக்கப்பட்டன.

இதில், ஏராளமான தங்க கட்டிகள், தங்க நாணயங்கள், வைரங்கள், விலை மதிப்பற்ற உலோகங்கள் மற்றும் சிலைகள் இருந்துள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார் 2 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் இன்னும் சில அறைகள் திறக்கப்படாமல் உள்ளதால், அதில் இதை விட அதிகளவிலான செல்வங்கள் இருக்கும் என கருதப்படுகிறது.
திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவில், ஆந்திரா
ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ளள ஏழுமலையான் கோயில், இந்தியாவின் பணக்கார கோவில்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோவிலை, திருமலா திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த கோவிலின் சொத்துமதிப்பு ரூ.2.5 லட்சம் கோடிக்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள், கட்டிடங்கள், தங்க வைப்பு மற்றும் ரொக்க இருப்பு உள்ளன. மேலும், பக்தர்களின் காணிக்கை, நன்கொடை, லட்டு விற்பனை என ஆண்டு தோறும் பல கோடிகளை வருமானமாக ஈட்டுகிறது. கோவில் உண்டியல் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு அதிகமாக வருமானம் கிடைக்கிறது.
ஷீரடி சாய்பாபா கோவில்
மஹாராஷ்டிர மாநிலம் ஷீரடிஅமைந்துள்ள சாய்பாபா கோவில் ஆண்டுக்கு ரூ.400 முதல் ரூ.480 கோடி வருமானம் ஈட்டுவதாக கூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த கோவிலுக்கு நன்கொடை வருகிறது.

இந்த கோவில், ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அறக்கட்டளை சார்பில், தொண்டு மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தர்மசாலைகள் மற்றும் சமூக சேவை முயற்சிகள் மேற்கொள்ளப் படுகிறது.
இந்தக் கோவிலுக்கு தினமும் சுமார் 60,000 பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில்
ஜம்மு-காஷ்மீரின் வைஷ்ணோ தேவி மலையில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு ஆண்டுக்கு சுமார் 1 கோடி பேர் வந்து செல்கின்றனர்.

இந்த கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.500 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நன்கொடை , பிரசாத வருமானம் போன்ற வழிகளில் வருமானம் கிடைக்கிறது. ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி ஆலய வாரியத்தால் இந்த கோவில் நிர்வகிக்கப்படுகிறது.
பஞ்சாப் பொற்கோவில்
அமிர்தசரஸில் அமைந்துள்ள இந்த கோவில் சீக்கிய மதத்தவர்களின் மிக முக்கியமான ஒரு புனித தலம். இந்த கோவிலின் மேற்கூரை மற்றும் இதன் தளம் சுமார் 750 முதல் 1500 கிலோ தங்கத்தால் ஆனது.

ஆண்டுக்கு 1000 கோடிக்கு மேல் இந்த கோவிலுக்கு பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது. உச்ச குருத்வாரா மேலாண்மைக் குழு இந்த கோவிலை நிர்வகிக்கிறது.
இந்த கோவிலில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.
மும்பை சித்தி விநாயகர் கோவில்

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு ஏராளமான தொழிலதிபர்கள், திரைத்துறையினர், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்கள் வந்து செல்வார்கள்.

இந்த கோவிலின் ஆண்டு வருமானம் சுமார் ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை இருக்கும். சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளை இந்த கோவிலை நிர்வகிக்கிறது.
பூரி ஜெகநாதர் கோவில், ஒடிசா
ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள ஜெகநாதர் கோவில், இந்தியாவில் அதிக நிலம் வைத்துள்ள கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு சொந்தமாக ஒடிசா மற்றும் அதன் பிற பகுதிகளில் சுமார் 60,000 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பல நூற்றாண்டுகளாக வழங்கப்பட்ட வரலாற்று நன்கொடைகள், பண்டைய தங்கம் மற்றும் வெள்ளி அதன் கருவூலத்தில் உள்ளது.
மதுரை மீனாட்சி கோவில்
தமிழ்நாட்டில் அதிக சொத்துமதிப்பு உள்ள கோவில்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில், பழங்கால தங்க நகைகள் மற்றும் வைரம் பதித்த கிரீடங்கள் ஆகியவை உள்ளன. மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில்
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை காலங்களில், கோவிலுக்கு சுமார் ரூ.300 கோடி வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது. அதில் பெரும்பான்மையாக அரவணை பாயசம் விற்பனையிலிருந்து வருகிறது.
குஜராத் சோம்நாத் கோவில்
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சோம்நாத் கோவில், அங்குள்ள பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவில் பல நூறு கோடி சொத்துக்களை உடையது.

இந்த கோவிலை ஸ்ரீ சோமநாத் அறக்கட்டளை நிர்வகிக்கிறது. இதன் தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |