7 மில்லியன் தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை: பிரித்தானிய மக்களை எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
பிரித்தானியாவில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் விஞ்ஞானிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியாவில் ஒரே நாளில் 41,192 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளது. இதனால், கொரோனா பெருந்தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து இதுவரை 7 மில்லியன் மக்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போதைய நிலை நீடிக்கும் என்றால், பாதிப்பு எண்ணிக்கை மிக விரைவில் இரட்டிப்பாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்கள் பாடசாலைக்கு திரும்ப உள்ளதும், அலுவலகங்களுக்கு ஊழியர்கள் திரும்புவதும் கொரோனா பரவல் எண்ணிக்கையை அதிகரிக்கும் வாய்ப்பாக அமையும் என்றே Prof John Edmunds சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது கோடை காலம் முடிந்துவிட்டது, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்தில் வேலை செய்ய எதிர்பார்க்கின்றன, மேலும் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புவதாக நான் நினைக்கிறேன்,
இவை அனைத்தும் கொரோனா பரவல் விகிதங்களை அதிகரிக்க செய்வதுடன் சமூகத்தில் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்றார் Prof John Edmunds.
இதனிடையே, திங்களன்று லட்சக்கணக்கான மேல்நிலைப் பள்ளி குழந்தைகள் வகுப்புக்குத் திரும்புவதால், வரும் வாரங்களில் கொரோன நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் என்று அமைச்சர்கள் கவலை கொண்டுள்ளனர்.