வெள்ளத்தில் மிதந்த லண்டன்!.. மனிதர்களுக்கு அடிக்கப்பட்ட ஓர் எச்சரிக்கை மணி- உடனடி நடவடிக்கை தேவை
பிரித்தானியாவை கடந்த சில நாட்களாக மழையும் வெள்ளமும் துவம்சம் செய்த நிலையில், அதற்குக் காரணம் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளே என்று கூறும் இந்திய வம்சாவளி அமைச்சர் ஒருவர், நாம் உடனே நடவடிக்கை எடுத்தாகவேண்டும் என்பதையே அவை நினைவூட்டுவதாக தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் நடைபெற உள்ள 26ஆவது ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற மாநாட்டை (COP26) பிரித்தானியா நடத்த உள்ளது.
இந்நிலையில், அந்த அமைப்பின் தலைவரான, இந்திய வம்சாவளி அமைச்சரான Alok Sharma, கடந்த சில நாட்களாக பிரித்தானியாவை துவம்சம் செய்த மழையும் வெள்ளமும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளே என்றும், நம் வீட்டு வாசல் வரை வந்த வெள்ளம், நாம் உடனே நடவடிக்கை எடுத்தாகவேண்டும் என்பதையே நினைவூட்டுகின்றன என்றும் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுகிழமை, ஒரு மாதத்தில் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததையடுத்து பிரித்தானிய சாலைகள் வெள்ளக்காடாகின.
வீடுகளுக்குள்ளும் அலுவலகங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. சில இடங்களில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிப்பு என சகஜ வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
தெற்கு இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு ஜெனரேட்டர்களும் வெள்ளத்தால் செயலிழந்ததால், அறுவை சிகிச்சைகளை ரத்து செய்யவேண்டிய நிலையும் ஏற்பட்டது.
இந்த சூழலுக்கு காரணம் பருவநிலை மாற்றமே என பலத்த குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ள நிலையில், மின்சாரம் முதலான ஆற்றல் தயாரிப்புக்கு பல நாடுகள் இன்னமும் நிலக்கரியையே பயன்படுத்துவதும் பருவநிலை மாற்றத்துக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்களுடன் நிலக்கரியை கைவிடுவது தொடர்பாக நடத்திய பேச்சு வார்த்தைக்குப்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த Sharma, பேச்சுவார்த்தை எவ்வித பலனையும் அளிக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
COP26 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் நாடுகள் புவி வெப்பமயமாதலை 1.5C அளவுக்கு கட்டுப்படுத்த சம்மதிக்கவேண்டும் என பிரித்தானியா விரும்புகிறது. ஆனால், G20 நாடுகள் அனைத்தும் நிலக்கரியை ஓரங்கட்ட சம்மதித்தாலன்றி அந்த இலக்கை அடைவது கடினம் என்கிறார் Sharma.
சமீபத்தில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டது பிரித்தானியா மட்டுமல்ல, ஜேர்மனி, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, சீனா என பல நாடுகள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரும் இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.