வருங்கால கணவனை கொலை செய்த பெண் வழக்கு: நடந்துள்ள எதிர்பாராத விடயம்
இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், பெண்ணொருவர் தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், அந்த வழக்கால் எதிர்பாராத மற்றொரு விடயம் நிகழ்ந்துள்ளது.
வருங்கால கணவனை கொலை செய்த பெண்
மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேயைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் என்பவருக்கும் சியா கோயல் (20) என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனது பிறந்தநாளைக் காரணம் காட்டி கேத்தனை கோட்டை ஒன்றிற்கு அழைத்துச் சென்ற சியா, தன் காதலனான சேத்தன் சௌத்ரி (22) என்பவருடைய உதவியுடன் அவரை பள்ளத்தில் தள்ளிக் கொலை செய்தார்.
அவர் கேத்தனை கொலை செய்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
சுற்றுலாத்தலத்தில் குவியும் மக்கள்
சியா தன் வருங்கால கணவரான கேத்தனை தள்ளிவிட்ட இடம், ஒரு சுற்றுலாத்தலம் ஆகும்.
ஆம், லோகாட் கோட்டை (Lohagad Fort) என்னும் பிரபல சுற்றுலாத்தலத்திற்கு அழைத்துச் சென்றுதான் கேத்தனை பள்ளத்தில் தள்ளிவிட்டுக் கொலை செய்தார் சியா.

இந்நிலையில், கேத்தன் கொலை வழக்கு குறித்த செய்திகள் அதிக அளவில் வெளியாகிவருவதைத் தொடர்ந்து, லோகாட் கோட்டைக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, சியா கேத்தனை தள்ளிவிட்ட இடத்தைக் காண மக்கள் குவிகிறார்களாம்.
1648ஆம் ஆண்டு மகாராஜா சத்ரபதி சிவாஜியால் கைப்பற்றப்பட்ட லோகாட் கோட்டை, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள கோட்டைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |