மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்த பிரித்தானியாவின் பிரதான மருத்துவமனை: நோயாளிகள் நிலை?
மான்செஸ்டரின் டிராஃபோர்ட் பொது மருத்துவமனை மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் நடந்த இச்சம்பவத்தை அடுத்து மருத்துவமனையின் ஒரு வார்டில் இருந்து நோயாளிகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை கூரை மீது திடீரென்று மின்னல் தாக்கியதும், நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு தேடி விரைந்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு ஊழியர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மின்னல் தாக்கி மருத்துவமனையின் ஒருபகுதி தீக்கிரையான சம்பவத்தை நிர்வாகிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
சம்பவத்தை அடுத்து, மிக சிறிய எண்ணிக்கையிலான நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு கருதி வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தீயணைப்புத்துறையின் 7 வாகனங்கள் மற்றும் ஊழியர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை தொடர்பிலான சாலையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மின்னல் தாக்கிய சம்பவத்தில் நோயாளிகள் அல்லது ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.