பிரித்தானியாவில் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு கடும் எதிர்ப்பு
பிரித்தானியாவுக்கு திரும்பும் பயணிகள் அனைவரும் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தும் ஓமிக்ரான் கொரோனா மாறுபாடு காரணமாக, போரிஸ் அரசின் நிபுணர்கள் குழு சிறப்பு விதிகளை பரிந்துரைத்துள்ளது. இதனால், பிரித்தானியாவுக்கு திரும்பும் பயணிகள் அனைவரும் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.
மட்டுமின்றி, 5வது நாள் மற்றும் 8வது நாளில் கொரோனா சோதனை முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போது அமுலுக்கு கொண்டுவந்துள்ள விதிகளின்படி, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அனைவருக்கும் முதல் இரண்டு நாட்களுக்குள் PCR சோதனை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, அமைச்சர்கள் மற்றும் பிரித்தானிய நிபுணர்கள் குழு முன்னெடுத்த அவசர ஆலோசனை கூட்டத்தில் 5 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் தொடர்பில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான ஒரு முடிவு அறிவிக்கப்பட்டால், அது கட்டாயம் வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை பாதிக்கும் என தொடர்புடைய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கொரோனா பெருந்தொற்று காலம் முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளால், அதில் தொடர்புடைய வேலைவாய்ப்புகள் கடும் சரிவை சந்துள்ளன. இது பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்க வைக்கும் முடிவாக மாறும் என்றே தொடர்புடைய அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
பிரித்தானியாவில் இதுவரை 22 பேர்களுக்கு ஓமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நூற்றுக்கும் அதிகமானோரின் மாதிரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.
ஸ்கொட்லாந்தில் ஒரே நிகழ்வில் பங்கேற்ற 9 பேர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், உள்ளூரில் அதிக அளவில் ஓமிக்ரான் பரவியிருக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கையானது நாள் ஒன்றிற்கு 78,000 என சரிவடைந்துள்ளது.
அதேவேளை, கொரோனா பரவலுக்கு முன்னர், நாள் ஒன்றிற்கு 500,000 பயணிகள் பிரித்தானியாவுக்குள் வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.