இணையத்தில் தகவல்கள்... ஐரோப்பாவில் ரயில் பயணிகளின் கடவுச்சீட்டுகளை ரத்து செய்ய கோரிக்கை
ஐரோப்பா முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள், தங்கள் தனிப்பட்ட தரவுகள் டார்க் வெப்'பில் (Dark Web) வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, புதிய கடவுச்சீட்டுகளைப் பெறுவதில் ஏற்படும் மன உளைச்சலையும் செலவுகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
கடவுச்சீட்டு
இன்டர்ரெயில் நிறுவனமான யூரைல் (Eurail) ஹேக் செய்யப்பட்ட நிலையில் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில், 300,000-க்கும் மேற்பட்ட ஐரோப்பியப் பயணிகளின் கடவுச்சீட்டு இலக்கம், பெயர்கள், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் மற்றும் வீட்டு முகவரிகள், பிறந்த திகதிகள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் திருடப்பட்டன.
ஆனால் இந்த வாரம், பாதுகாப்பு நடவடிக்கையின்போது நகலெடுக்கப்பட்ட தரவுகள் 'டார்க் வெப்'பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மாதிரித் தரவுத் தொகுப்பு ஒன்று டெலிகிராமில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் Eurail தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்தது.
இந்த அறிவிப்பு மீண்டும் கோபத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, தங்கள் கடவுச்சீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், குறைந்தது ஒரு வாடிக்கையாளர் அணுகியுள்ளதாக பிரித்தானியாவின் கடவுச்சீட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மாற்றுக் கடவுச்சீட்டுக்கான முழு 102 பவுண்டுகள் கட்டணத்தையும் அவர்கள் செலுத்த வேண்டும் என்று உள்விவகார அமைச்சகத்தின் முகமையும் குறிப்பிட்டுள்ளது.
டென்மார்க்கில் பாதிக்கப்பட்ட மற்றொரு வாடிக்கையாளர், தங்களது கடவுச்சீட்டை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், புதிய கடவுச்சீட்டைப் பெற 200 பவுண்டுகளுக்கும் அதிகமாக செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் பலர் புதியக் கடவுச்சீட்டுக்காக 100 பவுண்டுகளுக்கு மேல் செலவிட வேண்டும் என்பதில் கவலை தெரிவித்துள்ளதுடன், தரவுகள் திருடப்பட்டுள்ள நிலையில் புதிய கடவுச்சீட்டு பெறுமாறு உத்தியோகப்பூர்வ அறிவுரை இருந்தால், அதற்கு ஏதேனும் ஒரு வகையான இழப்பீடு வழங்கப்படத்தான் வேண்டும் எனவும் வாதிட்டுள்ளனர்.
யூரேல்
யூரேல் என்பது ஐரோப்பா முழுவதும் 33 நாடுகளில் மக்கள் விடுமுறைக்காகப் பயன்படுத்தும் இன்டர்ரெயில் பாஸ்களை விற்கும் ஒரு டச்சு நிறுவனம் ஆகும்.
நார்வேயின் வடமுனையிலிருந்து துருக்கியின் தென்கடற்கரை வரை இரயில் பயணம் செய்ய அனுமதிக்கும் ஏழு நாள் பயணச்சீட்டின் விலை, 28 வயது வரை உள்ளவர்களுக்கு 286 யூரோ ஆகும்.
28 முதல் 59 வயது வரையில் 381 யூரோ வசூலிக்கின்றனர். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 343 யூரோ கட்டணமாக வசூலிக்கின்றனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட இரு பிள்ளைகளை தந்தை அல்லது தாயார் கட்டணமின்றி அழைத்துச் செல்லலாம்.

இதனிடையே, தனிப்பட்ட தகவல்களைக் கோரும் எதிர்பாராத அல்லது சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகள் குறித்து கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை யூரேல் இந்த வாரம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், Rail Planner செயலியை அணுக அவர்கள் பயன்படுத்தும் கடவுச்சொல்லைப் புதுப்பிக்கவும், மின்னஞ்சல், சமூக ஊடக மற்றும் வங்கி கடவுச்சொற்களை மாற்றவும் கோரியுள்ளது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும் பணி இன்னும் நடைபெற்று வருவதாகவும், ஆனால் டெலிகிராமில் வெளியிடப்பட்ட மாதிரித் தரவுத் தொகுப்பில் விவரங்கள் இடம்பெற்றிருந்த அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் யூரேல் நிறுவனம் கூறியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |