எப்படியாவது நிலைத்து நின்று ஆட வேண்டும்: வங்காளதேசத்திற்கு எதிராக எச்சரிக்கையுடன் டிராவிஸ் ஹெட்
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளுக்காக விளையாடுகிறோம்; நிச்சயமாக ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என வங்காளதேச டெஸ்ட் தொடர் குறித்து அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
டிராவிஸ் ஹெட்
வங்காளதேசத்திற்கு எதிரான பயிற்சி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டார்வினில் 13ஆம் திகதி தொடங்குகிறது.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி தனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை மீண்டும் தொடங்குகிறது.
அவுஸ்திரேலியாவின் தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் (Travis Head) இந்த தொடரின் அழுத்தம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கிறார்.
நான் நிச்சயம் ஓட்டங்கள் குவிக்க வேண்டும்
அவர் கூறுகையில், "நடக்கவிருக்கும் நிகழ்வுகள் மீது மிகுந்த கவனம் இருக்கும் - இது ஒரு டெஸ்ட் போட்டி, மேலும் இதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளுக்காக நாங்கள் விளையாடுகிறோம். சில சமயங்களில் வலிமையான அணிகளுக்கு எதிராக விளையாடும்போது, ஒருவித எதிர்பார்ப்புடன் களமிறங்குவோம்.
அப்போது எப்படியாவது இந்தப் போட்டியில் நிலைத்து நின்று ஆட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கும். ஆனால், வங்காளதேசம் போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடும்போது நிலைமை மாறுபடும்.
அந்த அணி சமீபத்தில் எதிர்கொண்ட சூழல் மற்றும் நான் நிச்சயம் ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என்ற சுய எதிர்பார்ப்பு ஆகியவை ஒருவித நெருக்கடியை உருவாக்கும்.
ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்குவது சில சமயங்களில் மிகவும் சவாலானதாக அமையும். ஏனெனில், கிரிக்கெட் ஒரு கடுமையான விளையாட்டு.
எனவே, வரவிருக்கும் குறுகிய காலத்திலும், குறிப்பாக இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், எதிர்பார்ப்புகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதே முக்கியம் என்று நான் கருதுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |