சமையலறையை புதுப்பிக்கும்போது கிடைத்த புதையல் பானை: பிரித்தானிய தம்பதிக்கு அடித்த அதிர்ஷ்டம்
பிரித்தானியாவில், பழைய வீடு ஒன்றை வாங்கிய ஒரு தம்பதியர், அந்த வீட்டின் சமையலறையைப் புதுப்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களுக்கு ஒரு புதையல் பானை கிடைத்துள்ளது.
Image: ZacharyCulpin/BNPS
புதையல் பானை
புதையல் பானை என்பதை கதைகளில்தான் கேட்டிருக்கிறோம். ஆனால், இங்கிலாந்திலுள்ள South Poorton என்னுமிடத்தில் வாழும் பெக்கி மற்றும் ராபர்ட் தம்பதியர் (Becky and Robert Fooks), பழைய வீடு ஒன்றை வாங்கி, அதைப் புதுப்பிக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, உண்மையாகவே அவர்களுக்கு ஒரு புதையல் பானை கிடைத்துள்ளது.
Image: Duke'sAuctions/BNPS
ராபர்ட் சமையலறையின் தரைப்பகுதியை மண்வெட்டியால் கொத்திக்கொண்டிருக்கும்போது, அவரது கண்களில் ஒரு பானை தென்பட்டுள்ளது. மண்ணை விலக்கிப் பார்த்தால், பானை முழுவதும் தங்கக் காசுகளும் வெள்ளிக்காசுகளும் இருந்துள்ளன.
1,029 நாணயங்கள்
ராபர்ட் அவற்றைக் கொட்டி எண்ணிபார்க்க, மொத்தம் 1,029 நாணயங்கள் இருந்துள்ளன. அவை, 1642ஆம் ஆண்டுக்கும் 1644ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த முதலாம் ஜேம்ஸ் மற்றும் முதலாம் சார்லஸ் மன்னர்களின் உருவம் பொறித்த நாணயங்கள் ஆகும்.
Image: ZacharyCulpin/BNPS
மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த தம்பதியர் அது குறித்து அரசு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த, அந்த நாணயங்கள் பிரித்தானிய அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
Image: ZacharyCulpin/BNPS
பின்னர் அவை ஏலம் விடப்பட்டதில், தம்பதியருக்கு 60,000 பவுண்டுகள் கிடைத்துள்ளன. அந்தப் பணத்தை கல்லுரியில் சேரவிருக்கும் தங்கள் மகனுடைய படிப்புக்காகவும், வீட்டில் மீதமுள்ள புதுப்பிக்கும் பணிக்காகவும், இருக்கும் கொஞ்சம் கடனை அடைப்பதற்காகவும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள் தம்பதியர். அத்துடன், புதையல் கிடைத்ததைக் கொண்டாடவேண்டாமா? ஆகவே, ஒரு சிறிய பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்துள்ளார்களாம் பெக்கி, ராபர்ட் தம்பதியர்!
Image: ZacharyCulpin/BNPS
Image: ZacharyCulpin/BNPS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |