வெளிநாடு சுற்றுலா சென்ற குடும்பமே பலியான விவகாரம்: வழக்கு விசாரணை துவக்கம்
ஜேர்மன் குடும்பம் ஒன்று துருக்கிக்கு சுற்றுலா சென்ற நிலையில், குடும்பமே உடல் நலம் பாதிக்கப்பட்டு பலியான விடயம் நினைவிருக்கலாம்.
அந்த விடயம் தொடர்பில் இஸ்தான்புல்லில் வழக்கு விசாரணை துவங்கியுள்ளது.
சுற்றுலா சென்ற குடும்பமே பலியான விவகாரம்
கடந்த ஆண்டு, ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரைச் சேர்ந்த Servet (38), அவரது மனைவியான Cigdem Bocek (27), பிள்ளைகள் Masal (3) Kadir Muhammet (6), ஆகியோர், துருக்கி நாட்டிலுள்ள இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள்.

பல இடங்களை சுற்றிப் பார்த்த அந்தக் குடும்பத்தினர், Ortakoy என்னும் பிரபல சுற்றுலாத்தலத்தில் அமைந்துள்ள தெருவோரக் கடைகளில் விற்கப்படும் பிரபல உணவு வகைகளை சுவைத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து அவர்களுடைய உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படவே, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.
ஆனால், முதலில் பிள்ளைகள், அடுத்து தாய், பின்னர் தந்தை என மொத்தக் குடும்பமும் பலியாகிவிட்டது.
அவர்கள் பல்வேறு தெருவோரக் கடைகளில் பல உணவுகளை சுவைத்த நிலையில், அந்த உணவுகளில் ஏதோ ஒன்றுதான் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட காரணம் என முதலில் கருதப்பட்டது.
ஆனால், Servet குடும்பம் தங்கியிருந்த ஹொட்டலில் மூட்டைப் பூச்சிகளைக் கொல்வதற்காக பூச்சி மருந்து அடிக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, அந்த பூச்சிக்கொல்லி மருந்திலிருந்து வெளியான நச்சுக் காற்றே Servet குடும்பம் பலியாகக் காரணம் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை துவக்கம்
அந்த துயர சம்பவம் தொடர்பில் செவ்வாயன்று துருக்கியிலுள்ள இஸ்தான்புல் நகரில் வழக்கு விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

Servet குடும்பம் தங்கியிருந்த ஹொட்டல் உரிமையாளர், வரவேற்பாளர், பூச்சி மருந்து அடித்த துறை அலுவலர்கள் உட்பட ஆறு பேர் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், அவர்கள் Servet குடும்பத்தின் துயர மரணத்துக்கு தாங்கள் காரணம் அல்ல என மறுத்துள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர்களில் ஐந்து பேருக்கு 22 ஆண்டுகள் வரையும், ஆறாவது நபருக்கு 15 ஆண்டுகள் வரையும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இதற்கிடையில், உயிரிழந்த Servet குடும்பத்தினரின் உறவினர்கள், குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் கடும் தண்டனை விதிக்கவேண்டும் என கோரியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |