மூன்று மரபணு மாற்றத்துடன் பரவும் பயங்கர வைரஸ்! இந்தியாவுக்கு மேலும் அச்சுறுத்தலாக வந்த புதிய வகை கொரோனா!
தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கிய நிலையில், இந்தியாவுக்கு மேலும் அச்சுறுத்தலாக மூன்று மரபணு மாற்றம் அடைந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,95,041 பேர் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் நேற்று ஒரு நாளின் இறப்பு எண்ணிக்கை 2,023-ஆக பதிவாகியுள்ளது.
இரண்டாவது அலைக்கு மத்தியில் இரட்டை மரபணு மாற்றம் (Double Mutant) அடைந்த கொரோனா வைரஸால் தொற்று எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவிற்கு மேலும் பெரும் அச்சுறுத்தலை கொடுக்கும் விதமாக மூன்று மரபணு மாற்றம் (Triple-Mutant) அடைந்த கொரோனா வைரஸ் பரவிவருவது கண்டறியப்பட்டுள்ளது.
டிரிபிள்-மியூட்டண்ட் என்பது மூன்று வெவ்வேறு வகை கொரோனா வைரஸ் ஒன்று சேர்ந்து உருவான புதிய வகை கொரோனா வைரஸ் எனக் கூறப்படுகிறது.
வைரஸ் எந்த அளவிற்கு வேகமாகவும், அதிகமாகவும் பரவுகிறதோ அதற்கு ஏற்ப இது போன்ற மரபணு மாற்றங்கள் ஏற்பட்டு புதுப் புது வைரஸ்கள் உருவாகும் என மறுத்த்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த டிரிபிள்-மியூட்டண்ட் வைரஸ் மஹாராஷ்ட்ரா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பரவிவருவது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த புதிய வைரஸின் வீரியம் மற்றும் குணாதிசியங்கள் குறித்து ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.