50 ஆண்டுகளில் அமெரிக்காவில் முதல்முறை... அம்பானியுடன் பாரிய ஒப்பந்தம் செய்த டிரம்ப்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் மற்றும் உலகின் 20% எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை(strait of hormuz) ஈரான் மூடியுள்ளதால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மேலும், பல நாடுகள் பெட்ரோல், LPG தட்டுப்பாடால் கடும் சிக்கலான சூழலை எதிர்கொண்டு வருகின்றன.
அம்பானியுடன் ஒப்பந்தம் செய்த டிரம்ப்
இந்நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் முதல்முறையாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைய உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

300 பில்லியன் டொலர் மதிப்பில் டெக்ஸாஸ் மாகாணத்தின் பிரவுன்ஸ்விலில் அமைய உள்ள இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமம் முதலீடு செய்துள்ளது.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்கா மீண்டும் தனது எரிசக்தி ஆதிக்கத்திற்கு திரும்பி கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைய உள்ளதை பெருமையாக அறிவிக்கிறேன்.
இந்த வரலாற்று 300 பில்லியன் டொலர் ஒப்பந்தம், அமெரிக்க வரலாற்றில் பாரிய ஒப்பந்தம் ஆகும். இது அமெரிக்க தொழிலாளர்களுக்கும், அமெரிக்கா எரிசக்தி துறைக்கும், தென் டெக்ஸாஸ் மக்களுக்கும் கிடைத்த பாரிய வெற்றி ஆகும்.
இந்த பாரிய முதலீட்டிற்காக, எங்களின் இந்திய கூட்டாளியான, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அனுமதி நடைமுறைகளை எளிமைப்படுத்தியது மற்றும் வரிகளை குறைத்ததே பில்லியன் டொலர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யப்படுவதற்கு காரணம்.
இந்தப் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அமெரிக்க சந்தைகளுக்கு புதிய ஆற்றலாகவும், நமது தேசிய பாதுகாப்பையும் வலுப்படுத்தும். அமெரிக்காவின் எரிபொருள்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.
மேலும், பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருளாதாரப் பலன்களும் வரக் கிடைக்கும். உலகிலேயே மிகவும் தூய்மையான சுத்திகரிப்பு நிலையமாக இது திகழும்.
உலகளாவிய ஏற்றுமதியையும் வலுப்படுத்தி, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுடன், பொருளாதார வளர்ச்சியையும் தரும். எரிசக்தித் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கம் தொடங்கி விட்டது. அமெரிக்காதான் எப்போதும் முதலில்" என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் 2வது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற விழாவில் கலந்து கொண்ட அம்பானி முதன்முதலில் அவரை சந்தித்தார். கடந்த ஆண்டு டிரம்ப் கத்தார் தலைநகர் தோஹா சென்றிருந்த போது 2வது முறை சந்தித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |