6,000 மாணவர்களின் விசாக்கள் ரத்து! ட்ரம்ப் அரசின் அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவில் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டு மாணவர்கள் 6,000 பேரின் விசாக்களை ட்ரம்ப் அரசு ரத்து செய்துள்ளது.
குடியேற்ற விதிகள்
டொனால்டு ட்ரம்ப் ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் குடியேற்ற விதிகளை கடுமையாக்கி வருகிறார்.
அதேபோல் விசா தொடர்பிலும் திருத்தங்களை கொண்டுவந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது 6,000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளது.
பயங்கரவாதத்தை ஆதரித்தல், மதுபோதையில் வாகனங்களை ஓட்டுதல், குற்றச்செயல்களில் ஈடுபடுதல் போன்ற பல சட்டமீறல் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் சுமார் 200 முதல் 300 விசாக்கள் பயங்கரவாதத்தை ஆதரித்ததற்காக ரத்து செய்யப்பட்டதாக, வெளியுறவுத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால், விசாக்கள் ரத்து செய்யப்பட்ட மாணவர்கள் எந்த குழுக்களை ஆதரித்தார்கள் என்பதை அவர் கூறவில்லை.
விசாக்கள் ரத்து
அதேபோல் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறும்போது, தங்களது வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதால் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மாணவர்களின் விசாக்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு அளித்ததற்காகவும், காஸாவில் இஸ்ரேலின் நடத்தையை விமர்சித்ததற்காகவும் மாணவர் விசா மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்பின் விமர்சகர்கள் இந்த நடவடிக்கையை, "சுதந்திரமான பேச்சு உரிமைகள் மீதான தாக்குதல்" என்று கூறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |