பிரித்தானியப் படைகள் ஈரானுக்கு அனுப்புவது தொடர்பில் ட்ரம்பிற்கு அதிரடி நிபந்தனை வைத்த ஸ்டார்மர்
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தும் வரை, ஹார்முஸ் நீரிணைக்கு பிரித்தானியாவின் படைகள் அனுப்பப்படாது என்ற தகவல் கசிந்துள்ளது.
பிரித்தானியாவின் நிலைப்பாடு
ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் பிரித்தானியா தலையிட வேண்டும் என்றால் போர் முடிவுக்கு வர வேண்டும் என்றே ஸ்டார்மர் நிபந்தனை விதித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச சட்டம் மீறப்படாது என்பதற்கான உத்தரவாதங்களையும் பிரதமர் ஸ்டார்மர் கோர இருப்பதாக நம்பப்படுகிறது. ஹார்முஸ் நீரிணை ஸ்தம்பித்துள்ளதால் ஏற்படக்கூடிய உலகளாவிய பின்விளைவுகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில்,
அமெரிக்க ஜனாதிபதி நேட்டோ நட்பு நாடுகள் மீது நேற்றிரவு தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் நிலைப்பாடு மேலும் தெளிவுபடுத்தப்பட்டுது.
ஸ்டார்மரின் செயற்பாடுகள் தமக்கு ஏமாற்றமளிப்பதாகவே ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அத்துடன், ஸ்டார்மர் என்ன சர்ச்சிலா எனவும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
ஸ்டார்மர் மட்டுமின்றி, பிரான்ஸின் இமானுவல் மேக்ரானையும் கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், மிக விரைவில் பதவி இழக்கப் போகிறவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் விவகாரத்தில் ட்ரம்பின் கோரிக்கையை ஜனாதிபதி மேக்ரான் நிராகரித்திருந்தார். மொத்தத்தில் ஹார்முஸ் விவகாரத்தில் தனித்துவிடப்பட்ட ட்ரம்ப், தனது ட்ரூத் சமூக ஊடகத்தில், எங்களுக்கு எவரின் உதவியும் தேவையில்லை என பதிவிட்டார்.

ஆனால், ஹார்முஸ் விவகாரத்தில் பிரித்தானியா தலையிடுவது என்பது மிக சிக்கலான விடயம் என்றே அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தற்போதைய இந்தத் தாக்குதல்களும் உக்கிரமான பதிலடிகளும் முடிந்தவுடன், கப்பல் போக்குவரத்திற்காக அப்பகுதியைப் பாதுகாப்பாகத் திறப்பதற்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றே அரசாங்கம் தரப்பில் கூறப்படுகிறது.
பொருளாதாரத்தில் தாக்கம்
மூன்றாவது வாரத்தில் போர் முன்னெடுக்கப்படும் நிலையில், எண்ணெய் விலை 100 டொலருக்கு மேல் தொடர்ந்து நீடிக்கிறது. பிரித்தானியாவில் அதன் தாக்கம் ஏற்கனவே உணரப்பட்டு வருகிறது; எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதோடு, ஜூலை மாதத்தில் எரிசக்தி உச்சவரம்பு கடுமையாக அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.
மேலும், அமெரிக்காவின் நடவடிக்கைகளை பிரித்தானிய மக்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும், அது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவலை கொண்டுள்ளதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஹார்முஸ் பகுதிக்கு ஒரு போர்க்கப்பலுக்குப் பதிலாக கண்ணிவெடிகளைத் தேடும் ட்ரோன்களை பிரித்தானியா வழங்கக்கூடும். இருப்பினும் இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றே பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் போர் தொடர்பில் ஸ்டார்மரின் செயல்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைத்திருந்தாலும், ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்ததில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை என்றே தெரிய வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |