மஸ்க்கின் உயிரை காத்தேன்; ஆனால் நட்புறவு முறிந்துவிட்டது - டொனால்ட் ட்ரம்ப் அதிரடி
டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் உடனான நட்புறவு முறிந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மஸ்க்கை குறிவைத்துள்ளதாக ட்ரம்ப்
ட்ரம்ப் உடனான மோதலைத் தொடர்ந்து எலோன் மஸ்க் (Elon Musk) புதிய கட்சியை அறிவித்தார். அதே சமயம் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தற்போது மஸ்க்கை குறிவைத்துள்ளதாக அமெரிக்காவில் பேசப்படுகிறது.
அதனை நிரூபிக்கும் வகையில் அவரது பேச்சுகளும் உள்ளன. குறிப்பாக, மஸ்க்கின் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தாலே அரசின் செலவினங்களை குறைக்க முடியும் என்றும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
அத்துடன் ஜனநாயக கட்சியினருக்கு உதவினால் மஸ்க் பின்விளைவுகளை எதிர்கொள்வார் என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையில், ட்ரம்ப் தொலைபேசி வழியாக அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றுக்கு மஸ்க் குறித்து நேர்காணல் அளித்துள்ளார்.
நட்புறவு முற்றுபெற்று விட்டதாக நினைக்கிறேன்
அதில் அவர், "மஸ்க் உடனான நட்புறவு முற்றுபெற்று விட்டதாக நினைக்கிறேன். நான் மற்ற பணிகளை செய்வதில் மிகவும் பிஸியாக உள்ளேன். ஜனாதிபதி தேர்தலில் நான் பாரிய வெற்றியை பெற்றேன்.
ஆனால், அதற்கு முன்பாகவே அவருக்கு நிறைய சலுகைகள் அளித்தேன். நான் முதல்முறை ஜனாதிபதியாக ஆட்சி பொறுப்பில் இருந்தபோதும் இதை செய்தேன்.
அவரது உயிரை காத்தேன். அவருடன் பேசும் எண்ணம் எனக்கு இல்லை. 2026யில் நடைபெறும் இடைத்தேர்தலில் அவர், ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்தால் நிச்சயம் அதற்கான பின்விளைவுகளை எதிர்கொள்வார்" என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |