ஈரான் தொடர்பில் பிரித்தானியாவின் முடிவை மீண்டும் கடுமையாகச் சாடிய ட்ரம்ப்
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் பிரித்தானியாவின் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு ஸ்டார்மர் அனுமதி அளித்துள்ள நிலையில், பிரித்தானியா மிகவும் தாமதமாக முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டு ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஸ்டார்மர் விளக்கம்
பிரித்தானியாவின் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிப்பதில் அந்த நாடு இன்னும் வேகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, ஹார்முஸ் நீரிணை நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், நேட்டோ உறுப்பு நாடுகளைக் கோழைகள் என்றும் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், பிரித்தானியா மிகவும் தாமதமாக முடிவெடுத்துள்ளது என்றார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நல்ல நிலையில் இருந்தாலும், இப்படியான ஒரு சூழல் இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை என்றார்.
உலகம் முழுவதும் எடுத்துக்கொண்டாலும், பிரித்தானியாவே அமெரிக்காவின் முதன்மையான நட்பு நாடு என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு பிரித்தானியா உடனடியாக பதிலளித்தால், அது ஈரானில் போரை இன்னும் தீவிரப்படுத்தும் என்றே ஸ்டார்மர் விளக்கமளித்துள்ளார்.
பிரித்தானிய மக்களின் உயிருக்கும் நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஈரான் தரப்பில் இருந்து தாக்குதலைத் தடுப்பதற்காக மட்டுமே, ஸ்டார்மர் அரசாங்கம் முன்பு இராணுவத் தளங்களின் பயன்பாட்டை அனுமதித்திருந்தது.
ஆனால் தற்போது ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கும் வகையில் தாக்குதல் நடத்தும் ஈரானின் இலக்குகளை அழிக்கவும் தங்கள் தளங்களைப் பயன்படுத்தலாம் என பிரித்தானிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இருப்பினும், கடந்த இரண்டு வாரங்களில் 90 கப்பல்கள் நீரிணையைக் கடந்துள்ளது.
ஒரு காகிதப் புலி
எதிரிகளின் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி இல்லை என எச்சரித்துள்ள ஈரான், சுமார் 20 கப்பல்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் உதவி இல்லாமல், நேட்டோ அமைப்பு என்பது வெறும் ஒரு காகிதப் புலி என்றே ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஈரான் மீது போர் தொடுத்த அமெரிக்காவை ஐரோப்பிய நாடுகளும், நேட்டோ உறுப்பு நாடுகளும் கைவிட்டன.
தற்போது தனித்துவிடப்பட்டுள்ளதை உணர்ந்த ட்ரம்ப், நேட்டோ உறுப்பு நாடுகளை கோழைகள் என விமர்சித்துள்ளார். எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக புகார் கூறும் அவர்கள், ஹார்முஸ் நீரிணையைத் திறக்க உதவ மறுக்கிறார்கள் எனவும் கொந்தளித்துள்ளார்.
நேட்டோ உறுப்பு நாடுகளின் செயற்பாடுகளை அமெரிக்கா ஒருபோதும் மறக்காது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கான உரிய முயற்சிகளில் இணையத் தயாராக இருப்பதாக வியாழக்கிழமை தெரிவித்தன.

இந்த நிலையில், ஈரானுடன் ஒரு போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா தயாரில்லை என்றும், தங்களின் கை ஓங்கியிருப்பதையும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், ஈரானால் கடும் பாதிப்புக்கு உள்ளான நாடுகள் வரிசையில் அமெரிக்கா இல்லை என்பதுடன், இஸ்ரேலும் மத்திய கிழக்கு நாடுகளும் மீள முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |