வரிகளால் மிரட்டும் ட்ரம்ப்... அடுத்த பேரிடியை பரிசளிக்கத் தயாராகும் கனடா
ட்ரம்ப் நிர்வாகம் வரிகளால் மிரட்டி வரும் நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் F-35 போர் விமானங்களை வாங்கும் முடிவை கனடாவின் புதிய அரசாங்கம் கைவிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
மறுபரிசீலனை செய்வதாக
குறித்த தகவலை கனேடிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளமையால், இது உறுதி செய்யப்பட்ட முடிவென்றே கூறப்படுகிறது.
அமெரிக்க F-35 போர் விமானங்களை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மறுபரிசீலனை செய்வதாக ஐரோப்பிய நாடான போர்த்துகல் கூறிய இரண்டு நாட்களுக்குப் பிறகு கனடாவின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
மேலும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய வரிப் போர் மற்றும் அட்லாண்டிக் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான அவரது நடவடிக்கைகள் மீது சர்வதேச அளவில் கோபம் அதிகரித்து வரும் நிலையிலேயே போர்த்துகல் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
அனைத்து கனேடிய பொருட்களுக்கும் 25 சதவீத வரிகளை விதித்து அமெரிக்காவின் வடக்கு அண்டை நாடான கனடாவை ஜனாதிபதி ட்ரம்ப் தடுமாற வைத்தார். அத்துடன் கனடாவை 51வது அமெரிக்க மாகாணமாக மாற்ற பரிந்துரைப்பதன் மூலம் தொடர்ந்து கனேடியர்களை கோபப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், கனடாவில் புதிதாக பொறுப்பேற்ற பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்கா உடனான F-35 ஒப்பந்தம், தற்போதுள்ள நிலையில், கனடாவிற்கு சிறந்த முதலீடா என்பதை தீர்மானிக்க பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
உறுதி செய்ய வேண்டும்
மட்டுமின்றி, கனடாவின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யக்கூடிய வேறு வழிகள் இருந்தால் அதையும் பரிந்துரைக்கவும் அவர் கோரியுள்ளார். கடந்த 2023 ஜனவரி மாதம், அமெரிக்காவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்டினுடன் மொத்தம் 19 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான 88 F-35 போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கனேடிய அரசாங்கம் கையெழுத்திட்டது.
அத்துடன் 16 விமானங்களுக்கான தொகையை ஏற்கனவே கனேடிய நிர்வாகம் செலுத்தியுள்ளது. இந்த நிலையில் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள கனேடிய நிர்வாகம், அமெரிக்கா உடனான இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை,
ஆனால் மாறிவரும் சூழலைக் கருத்தில் கொண்டு நாம் நமது முடிவுகளை முன்னெடுக்க வேண்டும், மேலும் ஒப்பந்தம் அதன் தற்போதைய வடிவத்தில் கனேடியர்கள் மற்றும் கனேடிய ஆயுதப் படைகளின் நலன்களுக்காக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, போர்த்துகல் நிர்வாகமும், அமெரிக்க F-35 போர் விமானங்கள் மற்றும் ஐரோப்பிய விமானங்கள் இரண்டையும் ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
இதனால் கனடா மற்றும் போர்த்துகல் நிர்வாகங்கள் F-35 போர் விமானங்கள் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு கடும் அழுத்தம் அளிக்கக் கூடும் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |