ஜனாதிபதியாக இருந்துகொண்டே பல லட்சம் கோடி லாபத்தை அள்ளும் ட்ரம்ப்: வெளிவரும் பின்னணி
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்தாலும், ஜனாதிபதி பதவியை பயன்படுத்தி ஆதாயாம் ஈட்டுகிறார் என்ற குற்றச்சாட்டு தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
3,700 வர்த்தகங்கள்
ட்ரம்ப் 2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 3,700-க்கும் மேற்பட்ட பங்குச் சந்தை வர்த்தகங்களை (Stock trades) மேற்கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி, அமெரிக்க பங்குச்சந்தை வல்லுநர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் Office of Government Ethics வெளியிட்ட நிதி அறிக்கையின் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. மூன்று மாதங்களில் 3,700 வர்த்தகங்கள் என்பது, ஒரு நாளைக்கு சராசரியாக 40-க்கும் மேற்பட்ட பங்குகளை வாங்குவது அல்லது விற்பது ஆகும்.
ஒரு நாட்டின் ஜனாதிபதி இவ்வளவு தீவிரமாகப் பங்குச் சந்தையில் ஈடுபடுவது வரலாறு காணாத ஒன்று என்றே நிதித்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இது ஒரு தனிநபரின் கணக்கு போல இல்லாமல், Algo trading மூலம் இயங்கும் ஒரு பெரிய "ஹெட்ஜ் ஃபண்ட்" (Hedge Fund) நிறுவனம் செய்யும் வர்த்தகம் போல இருப்பதாக வால் ஸ்ட்ரீட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்த வர்த்தகங்களின் மொத்த மதிப்பு 220 மில்லியன் டொலர் முதல் 750 மில்லியன் டொலர் வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ 1,800 கோடி முதல் ரூ 6,200 கோடி வரை) இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக Nvidia, Microsoft, Amazon, Meta, Boeing, Apple போன்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் பங்குகளையே ட்ரம்ப் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், Conflict of Interest மற்றும் Insider Trading சந்தேகங்கள் ட்ரம்ப் மீது முன் வைக்கப்படுகின்றன. அதாவது அதி முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு தமது அதிகாரங்களைத் தவறாக பயன்படுத்தினாரா என்ற கேள்வி எழுகிறது.
ஏனெனில் ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள், வரிக் கொள்கைகள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் உலகப் பொருளாதாரத்தையே மாற்றக்கூடியவை. ட்ரம்ப் வாங்கிய அல்லது விற்ற சில நிறுவனங்களின் பங்குகள், அவரது அரசாங்கம் எடுத்த முக்கிய முடிவுகளோடு ஒத்துப்போகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ட்ரம்பின் நிறுவனம் விளக்கம்
Nvidia மற்றும் AMD நிறுவனங்களின் பங்குகளை ட்ரம்ப் வாங்கிய சில நாட்களிலேயே, அமெரிக்க வர்த்தக அமைச்சகம் இந்த நிறுவனங்களின் சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியது.
இதனால் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்ந்தது. Palantir Technologies பங்குகளை ட்ரம்ப் வாங்கிய சில வாரங்களில், அந்நிறுவனத்திற்கு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடமிருந்து 1 பில்லியன் டொலர் மதிப்புள்ள பிரம்மாண்ட ஒப்பந்தம் கிடைத்தது.

தற்போது இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வெள்ளை மாளிகை அதிகாரிகளும், ட்ரம்பின் நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளன. இந்த வர்த்தகங்களை ட்ரம்ப்போ அல்லது அவரது குடும்பத்தினரோ நேரடியாகச் செய்யவில்லை.
அவரது சொத்துக்கள் அனைத்தும் மூன்றாம் தரப்பு நிதி நிறுவனங்களால் முற்றிலும் தானியங்கி முறையில் (Automated Systems) நிர்வகிக்கப்படுகின்றன.
எந்தப் பங்குகளை வாங்க வேண்டும், விற்க வேண்டும் என்பதில் ட்ரம்ப்பிற்கு எந்தவிதத் தொடர்போ அல்லது முன்கூட்டிய தகவலோ கிடையாது என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |